கட் ஆன கரண்ட் - வராண்டாவில்படுத்துத் தூங்க விரும்பிய கலாம்!
சென்னை:அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மின்வெட்டு ஏற்பட்டதால், நேற்று இரவு முழுவதும் ஆளுநர் மாளிகையில் தங்கினார் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அப்துல் கலாம் நேற்று இரவு சென்னை வந்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியை தொடங்கவுள்ள கலாம், சென்னை வந்ததும் நேராக பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கலாம் வந்த சில நிமிடங்களிலேயே அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மின்சாரம் போய் விட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக மின்சாரம் வரவில்லை. இதனால் புழுக்கத்தில் நெளிந்த கலாம், விருந்தினர் மாளிகை வளாக வராண்டாவில் காற்றாட படுத்துத் தூங்க விருப்பம் தெரிவித்தார்.
ஆனால் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து கலாமை அருகில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். நேற்று இரவு முழுவதும் கலாம் அங்குதான் தங்கியிருந்தார்.
இரவு 11 மணிக்கு கலாம் ஆளுநர் மாளிகைக்கு வந்தார். இன்று காலை 10.30 மணிக்குத்தான் அவர் மீண்டும் அண்ணா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்குத் திரும்பினார் என்று ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications