தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி:பொங்கலையொட்டி தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று தடை விதித்து உத்தரவிட்டது.
இது தொடர்பாக இந்திய விலங்குகள் நல வாரியம் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி கே.ஜி.கோபாலகிருஷ்ணன், தருண் சட்டர்ஜி, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பேசுகையில்,
ஜல்லிக்கட்டின்போது விலங்குகளை பல துன்பங்களுக்கு ஆளாக்குகின்றனர். அவற்றை சாராயத்தை குடிக்க வைத்து கூட்டத்துக்குள் விரட்டுகின்றனர். அங்கு அந்த மாடுகள் மீது பாயும் கூட்டத்தினர் அதை பல வகையிலும் துன்புறுத்துகின்றனர்.
பலர் மிளகாய் பொடி போன்றவற்றை மாட்டின் கண் மீது தூவுகின்றனர். இதனால் உடல்ரீதியில் அந்த மாடு பெரும் சிரமத்தை சந்திக்கிறது. பல நேரங்களில் மாடுகள் இறந்து போவதும் உண்டு என்றார்.
மேலும் இந்த நிகழ்ச்சிகளில் தேவையில்லாத மனித உயிர்ப் பலிகளும் நடக்கின்றன. 2007ம் ஆண்டில் பாலமேடு (அலங்காநல்லூர்) ஜல்லிக்கட்டில் 65 பேர் படுகாயமடைந்தனர். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 35 பேர் காயமடைந்தனர். ஒருவர் பலியாகிவிட்டார் என்றும் தனது மனுவில் விலங்குகள் நல வாரியம் தெரிவித்திருந்தது.
மூத்த வழக்கறிஞர் வேணுகோபால் பேசுகையில், மிருகவதை தடுப்புச் சட்டத்தின்படி இதுபோன்ற ஜல்லிக்கட்டுகள் தடுக்கப்பட வேண்டும். இதற்கு தடை விதித்த உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்புக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தடை விதித்து தவறு செய்துவிட்டது என்றார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் ஜல்லிக்கட்டுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் தடை விதித்தனர்.இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பினர்.












Click it and Unblock the Notifications