வாஷிங் மெஷினுக்குள் சிக்கி உயிரிழந்த குழந்தை!
கோலாலம்பூர்:மலேசியாவில் வாஷிங் மெஷினுக்குள் சிக்கிக் கொண்ட ஒன்றரை வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
தெரங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்த பயங்கரம் நடந்துள்ளது. அந்த வீட்டில் உள்ள அப்தில்லா அல் ஹாடி (7) என்ற சிறுவன் தனது தம்பி நஸ்ருல் ஹபீஸுடன் (14 மாதம்) விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது வீட்டில் வாஷிங் மெஷின் ஓடிக் கொண்டிருந்தது. விளையாடிக் கொண்டிருந்த ஹபீஸ், வாஷிங் மெஷினுக்கு அருகே உள்ள மாடிப் படியில் ஏறியுள்ளான்.
சில படிகள் ஏறியவுடன், அவனது கைக்கு வாஷிங் மெஷின் எட்டியுள்ளது. இதையடுத்து அதன் மேல் புற மூடியைத் திறந்து பார்த்துள்ளான். வாஷிங் மெஷினுக்குள் துணிகள் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்த அவன் அதை எடுக்க முயன்றுள்ளான்.
அந்த சமயத்தில், தவறி உள்ளே விழுந்து விட்டான் அந்தப் பச்சிளம் பாலகன். மூடி மூடிக் கொள்ள உள்ளே சிக்கிக் கொண்ட ஹபீஸ் மெஷினின் வேகத்தில் உள்ளே சுற்றியுள்ளான்.
தம்பி வாஷிங் மெஷினுக்குள் விழுந்து விட்டதைப் பார்த்த அப்தில்லா, உடனடியாக ஓடிப் போய் மெஷினை நிறுத்தி விட்டு உள்ளே சிக்கிக் கொண்ட தம்பியை வெளியே இழுத்துள்ளான்.
பிறகு மாடிப் படியில் உட்கார்ந்து கொண்டு தம்பியைத் தட்டிப் பார்த்து பெயர் சொல்லிக் கூப்பிட்டுள்ளான். அதற்குள் வீட்டில் உள்ள பெரியவர்கள் விரைந்து வந்து பார்த்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications