தங்கபாலு ஆரம்பிக்கும் மெகா டிவி
சென்னை:தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்காக முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு புதிய தொலைக்காட்சி சேனலை ஆரம்பிக்கிறார். இதன் பெயர் மெகா டிவி.
ராஜிவ் பிறந்தநாளான ஆகஸ்ட் 20ம் தேதி முதல் இந்த சேனல் தனது ஒளிபரப்பைத் துவக்கும்.
பல கல்லூரிகளை நடத்தி வரும் தங்கபாலு சில்வர்ஸ்டார் கம்யூனிகேசன்ஸ் என்ற நிறுவனத்தை தனது மனைவி ஜெயந்தியின் பெயரில் துவக்கியுள்ளார்.
இந்த நிறுவனம் தான் தொலைக்காட்சியை நடத்தவுள்ளது.
![]() |
தொலைக்காட்சியை தொடங்குவது தங்கபாலு தான் என்றாலும் இது முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்காகவே என்கிறார்.
இஸ்ரோவின் இன்சாட் 2பி செயற்கைக் கோளைத் தான் தனது ஒளிபரப்புக்கு தங்கபாலு உபயோகிக்கவுள்ளார்.
எவ்வளவு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை தெரிவிக்க தங்கபாலு மறுத்துவிட்டார்.
ஆனால், தனது தொலைக்காட்சிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இருப்பதாக தங்கபாலு கூறியுள்ளார்.
இது தமிழகத்தை மையமாகக் கொண்டு காங்கிரஸ் கட்சியின் வளர்சிக்காக செயல்படுமாம்.
காங்கிரஸ் கட்சியை மீண்டும் தமிழகத்தில் வேரூன்ற வைக்கவும் மீண்டும் காமராஜர் ஆட்சியை மலர வைக்கவும், இளைஞர்களையும், பெண்களையும் கவரும் வண்ணம் இந்த மெகா டிவி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் தங்கபாலு.
அவர் கூறுகையில்,
மெகா டிவி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் முன்னின்று கொடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினமான வரும் ஆகஸ்ட் 20ம் தேதி தனது பிரத்தியேக ஒளிபரப்பை இந்த டிவி ஒளிபரப்பு தொடங்கவுள்ளது என்றார்.
பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைகள் இது போல டிவியை ஆரம்பிக்கும் வேலையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக சார்பில் கலைஞர் டிவி செப்டம்பர் 15ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் அதை முந்திக் கொண்டு மெகா டிவியை ஆரம்பிக்கிறார் தங்கபாலு.
தேமுதிக, மதிமுகவுக்கு மட்டும் தான் தனி சேனல்கள் இல்லை.













Click it and Unblock the Notifications