டாடாவுக்காக தமிழக அரசு கொடி பிடிப்பது ஏன்-வைகோ
சென்னை:தென் தமிழகத்தில் டாடா நிறுவன தொழிற்சாலை அமைய விவசாயிகளை ஏமாற்றி குறைந்த விலைக்கு நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு முயற்சிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டாடா நிறுவனம் அமைக்கவுள்ள டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலைக்காக, தமிழக அரசு 16,000 ஏக்கர் நிலத்தை ஏழை விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்த உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை, கூத்தன்குழி, நாசரேத் மற்றும் தோரிக்காடு ஆகிய பகுதிகளில் நிலங்களை டாடாவுக்காக பறித்து கொடுப்பதற்காக தீவிரமாக இறங்கியுள்ளது. டாடா தொழிற்சாலை அமையப் போகும் இந்த பகுதிகளில் சுமார் 40ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றனர்.
முதலில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிலங்களை மட்டுமே டாடா நிறுவனத்துக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இப்போது என்னவென்றால் பொது மக்களின் நிலங்களை சொற்ப விலைகொடுத்து பறிக்கும் வேலையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
சிறப்புப் பொருளாதார மண்டல சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தின்படி, தொழிற்சாலைகள் அமைவதற்கான நிலங்களை, நிலத்தின் உரிமையாளர்களிடம் நிறுவனங்கள் நேரடியாக பேசி வாங்கிக் கொள்ள வேண்டும் என உள்ளது. ஆனால் இதற்கு விதிவிலக்காக டாடா நிறுவனத்துக்கு தமிழக அரசு ஏன் இறங்கி வேலை செய்கிறது?.
பாதிக்கப்படும் குடும்பங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பேருக்கும் டாடா நிறுவனம் வேலை வாய்ப்பு கொடுக்கும் என்னும் அறிவிப்பு நடைமுறைக்கு ஒத்து வராதது.
ஆகவே, தமிழக அரசு பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்களின் வாழ்க்கை சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
அப்படி இல்லையெனில் இந்தியாவின் தென்பகுதியிலும், ஒரு நந்திகிராமம் உருவாகும் சூழல் ஏற்பட்டுவிடும் என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications