விழுப்புரம்: திருவிழாவில் தேர் கவிழ்ந்தது- 15 பேர் படுகாயம்
விழுப்புரம்:விழுப்புரத்தை அடுத்துள்ள ரிஷிவந்தியத்தில் நடந்த கோவில் தேர் திருவிழாவில், தேர் குடை சாய்ந்து 15 பேர் காயமடைந்தனர்.
ரிஷிவந்தியத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் கடந்த 5 ஆண்டுகளாக செப்பனிடப்பட்டு வந்தது. திருப் பணிகள்கள் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் குட முழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந் நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக கோவில் தேர் மழையிலும், வெயிலிலும் பாழ்பட்டு வந்தது. இந்தத் தேர் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இதையடுத்து பொது மக்களும், பக்தர்களும் இணைந்து தேரை செப்பனிட்டனர். தற்போது கோவிலில் வருடாந்திர திருவிழா நடைபெற்று வருவதை முன்னிட்டு, தேரோட்டம் நடத்தப்பட்டது. இதில் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் காமராஜர் வீதியில் வந்தபோது 5 அடி ஆழ பள்ளத்தில் இறங்கியது. நிலை தடுமாறிய தேர் முன்பக்கமாக குடை சாய்ந்தது. தேர் கவிழ்வதை கண்ட பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
குடை சாய்ந்த தேர் கீழே விழாமல் மின் கம்பத்தின் வயர்களால் சாய்ந்து நின்றது. அடுத்த சில நொடிகளில் தேரின் சுமை தாங்காமல் மின்சார வயர்கள் அறுந்து மின் கம்பமும் உடைந்தது. இதனால் தேர் தரையில் சாய்ந்துவிட்டது.
இதில் கோவில் அர்ச்சகர் சோமு, கோவில் ஊழியர் ஜெயராமன் உட்பட 15க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications