அப்சல் குரு விவகாரத்தில் நடந்தது என்ன-மனம் திறக்கிறார் கலாம்
சென்னை:நாடாளுமன்றத்தை தாக்கிய வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் தண்டனையை குறைக்கும் மனு மீதான விஷயத்தில் என்ன நடந்தது என்பதை இப்போது வெளியில் கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.
தான் பதவி விலகியதையொட்டி இந்தியா டுடேவுக்கு அவர் விரிவான பேட்டி அளித்துள்ளார். அதில்,
கடந்த 2005ம் ஆண்டு நான் ரஷ்யாவில் இருந்தபோது பீகார் அரசை கலைக்க உத்தரவிட்டேன். இது நான் தவறாக எடுத்த முடிவு கிடையாது. அப்போதைய பிரதமருடன் பேசி அனைத்து விவரங்களையும் கேட்ட பிறகு தான் இந்த நடவடிக்கையை எடுத்தேன்.
![]() |
அதற்கான தகவல்களை நான் தொலைபேசியில் கேட்டது மட்டுமல்லாது, பேக்ஸ் மூலமாகவும் பெற்று பரீசலித்த பின்பு தான் முடிவெடுத்தேன். இதற்காக நான் கவலைப்படவும் இல்லை.
ஆதாயம் தரும் பதவி மசோதாவை திருப்பி அனுப்ப நான் எடுத்த முடிவும் சரியானதுதான். நாடாளுமன்றத்துக்கு திருப்பி அனுப்பியதால் தான் இந்த மசோதா பற்றி விரிவான விவாதம் நடத்தி அதற்கு நல்ல பலன் கிடைத்தது.
அப்சல் குருவின் மீதான நடவடிக்கை
இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்ஸல் குருவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் மரண தண்டனை பெற்ற அப்சலின் கருணை மனு மீது முடிவெடுப்பதில் தாமதம் ஆனதை குறையாக பேசுகிறார்கள்.
நான் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி கருத்து கேட்டேன். உள்துறை அமைச்சகம் நான் பதவியிலிருந்து விலகும் கடைசி நாள்வரை எனக்கு திருப்பி அனுப்பவில்லை. அரசிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை. உள்துறை அமைச்சகம் தனது கருத்துடன் அந்த மனுவை எனக்கு திருப்பி அனுப்பியிருந்தால் நான் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்திருப்பேன்.
ஜனாதிபதியின் அதிகாரங்களை மறுபரீசலனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பல சோதனையான கால கட்டத்தில் எல்லாம் அரசியல் சட்டம் உறுதியாக இருந்துள்ளது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நான் செய்த பணியில் எந்தத் தடையும் ஏற்பட்டது இல்லை.
குடியரசுத் தலைவரால் இன்னும் பெரியளவில் பணியாற்ற முடியும் என்று நான் உணருகிறேன்.ஜனாதிபதியின் எண்ணம் பெரியளவில் இருந்தால் அதை அவரால் செயல்படுத்த முடியும். நோக்கம் பெரியதாக இருந்தால் அதை வெளிப்படுத்த அவரால் முடியும். இது இரண்டையும் யாராலும் தடுக்க முடியாது.
நான் ஜனாதிபதியாக வாஜ்பாய், மன்மோகன் சிங் என இரண்டு பிரதமர்களிடமும் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். இருவரும் குறைவாக பேசி அதிகமாக செயலாற்றக்கூடிய திறமை படைத்தவர்கள். அவர்களுடன் சேர்ந்து பணியாற்றியது மகிழ்ச்சியே.
நமது நாட்டின் அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் நாட்டினுடைய முன்னேற்றத்திற்காக 70 சதவீத நேரத்தை செலவிட வேண்டும். அப்போது தான் நாம் வல்லரசு நாடாக வளர்ச்சியடைய முடியும். நமது வாக்காளர்களும் தலைவர்களின் வளர்ச்சி பணிகளை கணக்கிட்டு வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கலாம்.
அப்சல் குருவுக்கு மரண தண்டனையை மறுபரிசீலனை செய்வதில் கலாம் மீது பால் தாக்கரே, பாஜக தலைவர்கள் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பதிலே வராததால் தான் அவர் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார் என்ற விவரம் இப்போது தான் வெளியில் வந்துள்ளது.













Click it and Unblock the Notifications