முல்லைத் தீவில் விமானப் படை தாக்குதல்:தேவாலாயம், பள்ளி, குடியிருப்புகள் சேதம்
கொழும்பு:இலங்கை விமானப் படையின் போர் விமானங்கள் முல்லைத் தீவில் தமிழர் பகுதிகளில் உள்ள தேவாலயத்தின் மீதும் பள்ளி மீதும் அருகே உள்ள குடியிருப்புகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில் பள்ளி மாணவி படுகாயமடைந்தார்.
நேற்று பகலில் இந்தத் தாக்குதல் நடந்தது. புனித ஆண்டனி தேவாலயத்தின் மீதும், அலம்பில் ரோமன் கத்தோலிக்க தேவாலய பள்ளி மீதும் இரண்டு முறை குண்டுகள் வீசப்பட்டன.
முதலில் 12.30 மணியளவிலும் பின்னர் 2 மணிக்கும் இந்தத் தாக்குதல்கள் நடந்தன. இத் தாக்குதலால் பள்ளியில் இருந்த மாணவ, மாணவிகள் பதறியபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் அருள்ரஞ்சனா என்ற 12 வயது மாணவி தலையில் படுகாயமடைந்து திலீபன் நினைவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இத் தாக்குதலில் தேவாலயம், பள்ளி, பெனாசிர் ஆரம்பப் பள்ளிக் கட்டடங்களும் அருகே இருந்த வீடுகளும் பலத்த சேதமடைந்தன. இதனால் இப் பள்ளிகளில் தேர்வுகளும் பாதிக்கப்பட்டுள்ளன என விடுதலைப் புலிகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செய்தித் தொடர்பாளர் செல்வி கூறியுள்ளார்.
இந்திய கோழிகளுக்கு தடை:
இதற்கிடையே இந்தியாவின் வட கிழக்குப் பகுதியில் கோழிகளுக்கு பேர்ட் ப்ளூ காய்ச்சல் பரவியுள்ளதையடுத்து இந்தியாவில் இருந்து இறைச்சிக்காக கோழிகளை இறக்குமதி செய்வவதை இலங்கை நிறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications