கோவா: சபாநாயகர் உதவியோடு தப்பிய காங் அரசு
பனாஜி:கோவாவில் சபாநாயகரின் உதவியோடு இன்று திகாம்பர் காமத் தலைமையிலான காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்தது. இதனால் காங்கிரஸ் அரசு தப்பியது.
கடந்த வாரம் கோவாவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு கொடுத்த ஆதரவை திடீரென 2 எம்எல்ஏக்கள் திரும்ப பெற்றனர். அதே போல காங்கிரஸ் எம்எல்ஏ விக்டோரியாவும் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவை ஆதரிக்கப் போவதாக அறிவித்தார்.
ஆட்சி அமைத்த 49 நாளிலேயே ஆதரவு எம்எல்ஏக்கள் விலகியது கோவா அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விலகிய எம்எல்ஏக்கள் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவுக்கு ஆதரவு அளிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
இதனால் திகாம்பர் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது.
அவர் பதவி விலகவேண்டும் இல்லையெனில் சட்டசபையில் தனது கூட்டணி சார்பில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பாஜக கோரியது.
திகாம்பரை காப்பாற்ற கோவா மாநில கவர்னர் ஜமீர் முயன்றார். ஆனால், ஜனாதிபதி பாட்டீலை சந்தித்த பாஜக தலைவர்கள தங்களுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களை அணி வகத்துக் காட்டினர்.
இதையடுத்து தனது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு திகாம்பருக்கு உத்தரவிடப்பட்டது.
இந் நிலையில் இன்று சட்டசபையில் திகாம்பர் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.
ஆனால், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள சபாநாயகரின் உதவியோடு காங்கிரஸ் பெரும் அரசியல் சர்க்கசில் ஈடுபட்டது.
முதலில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விக்டோரியா பெர்னான்டஸ் வாக்களிக்க தடை விதித்தார் சபாநாயகர்.
அதே போல காங்கிரஸ் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்ற மகாராஷ்டிர கோமந்தக் கட்சியின் இரு எம்எல்ஏக்களுக்கும் வாக்களிக்க முடியாது என தடை விதித்தார்.
இவர்களது வாக்குகளை நம்பித்தான் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டமிட்டிருந்தது.
இந் நிலையில் சபாநாயகரின் தடை இவர்களை வாக்களிக்க விடாமல் செய்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான ஓட்டெடுப்பிலேயே கலந்து கொள்ளாமல் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.
இதனையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் தனது பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் திகாம்பர் காமத்.












Click it and Unblock the Notifications