முதல் மேட் இன் இந்தியா லேப்டாப்-சென்னையில் தயாரானது!
சென்னை:முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, மேட் இன் இந்தியா முத்திரை பதிக்கப்பட்ட, முதலாவது லேப்டாப் கம்ப்யூட்டரை டெல் நிறுவனம் இன்று வெளியிட்டது.
இந்த நிறுவனத்தின் சென்னை உற்பத்தி பிரிவில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் டெல் நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் இந்த உற்பத்திப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுளுக்கான முதலீடாக 30 மில்லியன் டாலர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை பிரிவின் மூலம் ஆண்டுதோறும்.4 லட்சம் லேப்டாப் கம்ப்யூட்டர்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. தனது புதிய உற்பத்திப் பிரிவை அமைக்க சென்னை நகரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல் நிறுவனம் தேர்வு செய்தது. அடுத்து மூன்று மாதங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கின.
ஆசியா-பசிபிக் மற்றும் ஜப்பான் பிராந்தியத்தில் டெல் நிறுவனத்தின் மூன்றாவது உற்பத்திப் பிரிவு சென்னை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தொடக்கத்தில், பிரேசில் நாட்டில் தனது உற்பத்திப் பிரிவை தொடங்கியது டெல். இந்த ஆண்டு பிற்பகுதியில், போல்ந்து நாட்டில் தனது உற்பத்திப் பிரிவை தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
சென்னை பிரிவின் உற்பத்தி இன்று முதல் தொடங்கியுள்ளது. அதற்கு அடையாளமாக மேட் இன் இந்தியா முத்திரையுடன் கூடிய முதலாவது லேப்டாப் கம்ப்யூட்டரை டெல் நிறுவனம் இன்று வெளியிட்டது.
முதல் கம்ப்யூட்டரை இன்போசிஸ் நிறுவனத்தின் உதவி துணை தலைவர் ஆர்.என்.கெளசிக் பெற்றுக் கொண்டார். டெல் இந்தியா நிறுவன பொது மேலாளர் ராஜன் ஆனந்த் முதலாவது கம்ப்யூட்டரை கெளசிக்கிடம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராஜன் ஆனந்த் பேசுகையில், இந்தியாவில் டெல் நிறுவனத்துக்கு தற்போது உள்ள வாடிக்கையாளர்கள் தவிர எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
தகவல் தொழில்நுட்பத்தை நாங்கள் மேலும் எளிதாக்கியுள்ளோம். டெல் நிறுவனத்துக்கு இந்தியா மிகவும் முக்கியமான நாடு என்பதை நிரூபிக்கும் வகையில் சென்னை பிரிவின் உற்பத்தி விரைவில் தொடங்கியுள்ளது. மேலும் பல வளர்ச்சித் திட்டங்களை நாங்கள் சென்னைக்காக வைத்துள்ளோம்.
எங்களது சென்னைத் திட்டம் வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளதற்காக தமிழக அரசையும், மத்திய அரசையும் பாராட்டுகிறோம்.
எட்டு மாதங்களில் நாங்கள் உற்பத்தியை ஆரம்பிக்க தமிழக அரசும், அரசு அதிகாரிகளும், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை கொடுத்த ஒத்துழைப்புதான் காரணம் என்றார் அவர்.