நெல்லை இரட்டைக் கொலை.. வீரவநல்லூர் பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றவர் சுட்டுப்பிடிப்பு
திருநெல்வேலி: நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் 12ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கிருஷ்ணன் என்ற அஜித் என்பவர் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.
வீரவநல்லூர் பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதால் துப்பாக்கிச்சூடு. காயமடைந்த காவலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 12 பேரை கைது செய்துள்ளது காவல் துறை.

திருநெல்வேலியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தந்தை மற்றும் மகன் இரட்டை படுகொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து, மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30), ராஜதுரை (30), முத்துப்பட்டன் என்ற பட்டுராஜா (20), மகாலிங்கம் ( 24) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வீரவநல்லூர் அருகே கடந்த ஜூலை 2ஆம் தேதி மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து தனது மகன்களான ஜெயராஜ், சின்னத்துரை ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த மர்ம கும்பல் காளிமுத்துவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் காளிமுத்து மற்றும் அவரது இரு மகன்களும் கீழே விழுந்தனர். இதையடுத்து, மர்ம கும்பல் அவர்கள் மூவரையும் கொடூரமாகத் தாக்கினர்.
இதில் காளிமுத்து, அவரது 5 வயது மகனான ஜெயராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு மகனான சின்னத்துரை பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வீரவநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சுமார் 20 ஆண்டுகளாக இரு குடும்பத்தினருக்கும் இடையே நிலவும் தீராப்பகையால் கொலை சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது. கொலையாளிகளைப் பிடிக்க இரண்டு டிஎஸ்பிக்கள் நான்கு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நெல்லை இரட்டைக்கொலை சம்பவத்தில் இளைஞரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. தகவலறிந்து அஜித்தை பிடிக்கச் சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தியதில் போலீசார் ஒருவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. வனப்பகுதியில் பதுங்கி இருந்த கிருஷ்ணன் என்ற அஜித் என்பவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தது காவல்துறை.












Click it and Unblock the Notifications