திருவொற்றியூர் பகுதியில் நள்ளிரவில் 7 மணிநேரமாக மின்வெட்டு.. மக்கள் நெடுஞ்சாலையில் படுத்து போராட்டம்
சென்னை: சென்னை திருவொற்றியூர் தியாகராயபுரம் தாங்கல் பகுதியில் நள்ளிரவில் 7 மணி நேரமாக மின்வெட்டு தொடர்ந்த நிலையில், பொதுமக்கள் ஆத்திரமடைந்து வள்ளலார் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு, ஆங்காங்கே பொதுமக்கள் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிடுவதும், சாலை மறியலில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், நேற்று சென்னை திருவொற்றியூர் தியாகராயபுரம் தாங்கல் பகுதியில் நள்ளிரவில் 7 மணி நேரமாக மின்வெட்டு தொடர்ந்த நிலையில், பொதுமக்கள் ஆத்திரமடைந்து வள்ளலார் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்கள் படுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு வந்த போலீசார், பொதுமக்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். அவர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தினமும் இரவு நேரங்களில் மின்சாரம் தடைபடுகிறது என்றும், நிம்மதியாகத் தூங்க முடியவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு ஈசிஆர் சாலையில் உள்ள பாலவாக்கம் பகுதியில் இரவு 9.30 மணி முதல் இரவு 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அந்த பகுதி மக்கள் இரவில் தூங்க முடியாமல் தவித்தனர். இது குறித்து அவர்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர், முதலமைச்சர் விஜய் வீடு செல்லும் பாலவாக்கம் சாலையை முற்றுகையிட்டு தங்களுக்கு மின்சாரம் வேண்டும் என்று கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஈசிஆர் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications