கைதியிடம் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கி தப்பவிட்ட ஏட்டு கைது
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான கைதியை தப்ப விடுவதற்காக அவரிடமிருந்து ரூ. 15 லட்சம் லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டார்.
இலங்கையைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் கடந்த ஆண்டு போதைப் பொருள் கடத்தியதாக சென்னையில் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த 14ம் தேதி புழல் மத்திய சிறையிலிருந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட 20 கைதிகளுடன் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
சிகிச்சை முடிந்து கைதிகள் வெளியே கொண்டு வரப்படும்போது சுந்தரராஜன் தப்பி ஓடி விட்டார். இதுதொடர்பாக பூக்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில், சுந்தரராஜன் தப்பியதில் பெரும் சதி அடங்கியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவர்களின் விசாரணையில் கைதிகளுக்குப் பாதுகாப்பாக வந்த தலைமைக் காவலர் ராஜுதான் சுந்தரராஜன் தப்ப காரணம் எனத் தெரிய வந்தது. சுந்தரராஜன் சிறையில் இருந்தபோது அவரை பத்துக்கும் மேற்பட்ட முறை சாதாரண பார்வையாளர் போல ராஜு பார்த்துப் பேசியுள்ளார். அப்போதுதான் தப்பி ஓடுவதற்கான திட்டத்தை ராஜு, சுந்தரராஜனுக்கு வகுத்துக் கொடுத்துள்ளார்.
சுந்தரராஜனை தப்ப விடுவதற்காக அவரிடமிருந்து ரூ. 15 லட்சம் பணத்தையும் லஞ்சமாக வாங்கியுள்ளார். மொத்தம் ரூ. 50 லட்சம் பேரம் பேசப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக 15 லட்சம் பணத்தை வாங்கியுள்ளார் ராஜு. இதையடுத்து ராஜுவை போலீஸார் கைது செய்தனர்.
ராஜு கைதிகளைத் தப்ப விடுவது இது முதல் முறையல்ல, 3வது முறை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே 2 முறை அவர் கைதிகளைத் தப்ப விட்டு சஸ்பெண்ட் ஆகியுள்ளார். கடந்த 22 வருடங்களாக ஆயுதப் படையில் பணியாற்றி வருகிறார் ராஜு. கைதிகளை கோர்ட்டுக்கும், மருத்துவமனைக்கும் கொண்டு செல்லும் பணியில் இவர்தான் ஈடுபடுத்தப்படுவது வழக்கம்.
இதைப் பயன்படுத்தித்தான் கைதிகளை தப்ப விட்டு பணம் பார்த்து வந்துள்ளார் ராஜு. தப்பி ஓடிய சுந்தரராஜனைப் பிடிப்பதற்கும், அவரிடமிருந்து ராஜு லஞ்சமாக வாங்கிய பணத்தைப் பறிமுதல் செய்வதற்கும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சுந்தரராஜனிடமிருந்த வாங்கிய பணத்தை படு தெளிவாக தனது பெயரிலோ அல்லது குடும்பத்தினர் பெயரிலோ வங்கியில் வைத்துக் கொள்ளவில்லை ராஜு என்று கூறப்படுகிறது. இதனால் அவர் வாங்கிய பணத்தை எங்கு பதுக்கியுள்ளார் என்று தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications