காதல் தகராறு-இரு சமூகத்தினர் பயங்கர மோதல்ஒருவர் கொலை: திமுக புள்ளி எஸ்கேப்
திருச்சி:திருச்சி அருகே காதல் விவகாரத்தில் இரு சமூகத்தினர் இடையே நடந்த மோதலில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த வாலிபரும் பெண்ணும் காதலித்ததால் இந்தப் பிரச்சனை வெடித்தது.
இது தொடர்பாக திருச்சி புறநகரான சோமரசம்பேட்டையில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடையே தகராறு இருந்து வந்தது. இந் நிலையில் புருஷோத்தமன் என்ற வாலிபர் எதிர்தரப்பினரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்தச் செய்தி பரவியதும் எதிர் தரப்பினர் பயங்கர ஆயுதங்களும் இன்னொரு சமூகத்தினரை தாக்க ஆரம்பித்தனர். இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டதோடு அப் பகுதியின் வீடுகள், கடைகள், வாகனங்களையும் சூறையாடினர்.
இத் தாக்குதலாலும் கல்வீச்சிலும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரையும் இரு தரப்பினரும் தாக்கினர். இதில் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட சில போசாரும் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து கூடுதல் எஸ்பி சந்திரசேகர் தலைமையில் ஆயுதப் படையினர் அங்கு விரைந்து வந்து கும்பலை அடித்து விரட்டி கலையச் செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து நிலைமை பதற்றமாக இருக்கவே திருச்சி மண்டல வருவாய் கோட்ட அதிகாரி ராமன் இரு தரப்பினருடனும் சமரச பேச்சு நடத்தினார்.
இந்த வன்முறை தொடர்பாக 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறைக்கு முக்கிய காரணமாக இருந்தவராகக் கருதப்படும் சோமரசம்பேட்டை ஒன்றிய திமுக செயலாளர் பழனியாண்டி தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மோதல் தொடராமல் தடுக்க அங்கு ஆயுதப் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications