டாடா திட்டம் நிறுத்தி வைப்பு:அதிமுகவுக்குக் கிடைத்த வெற்றி - ஜெ.
சென்னை:டாடா நிறுவனத்தின் டைட்டானியம் டை ஆக்சைடு திட்டத்தை மக்கள் கருத்தை அறிந்த பின்னரே அமல்படுத்துவது என்று திமுக அரசு முடிவு செய்துள்ளது, அதிமுகவுக்கும், தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
டாடா நிறுவனத்தின் திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து மக்கள் கருத்தை அறிந்த பின்னர் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:
சனிக்கிழமைதான், இத்திட்டத்தை எதிர்த்து நானே நேரடியாகப் போராடப் போகிறேன் என்று அறிவித்திருந்தேன். இதையடுத்து இந்த்த திட்டத்தை நிறுத்தி வைப்பதாக கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி. அது மட்டுமல்லாது, இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள், மக்களுக்குக் கிடைத்த வெற்றியுமாகும். அவர்களின் மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி இது.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களின் நலனுக்காகவே அதிமுக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் டாடா நிறுவனத்துடன் இத்திட்டம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இத்திட்டத்தால், மக்களின் வாழ்க்கை, சுற்றுச்சூழல், மண்ணின் தன்மை ஆகியவற்றுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால், இத்திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று நான் தடை விதித்து விட்டேன் என்று கூறியிருந்தார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications