ராணுவம் சுட்டு 3 அப்பாவித் தமிழர்கள் பலி
கிளிநொச்சி:இலங்கை ராணுவம் சுட்டதில் 3 அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்தனர். இதுதவிர ஒரு பெண், சிறுவன் உள்பட 5 பேரை ராணுவம் கடத்திச் சென்று விட்டது.
மணிபே என்ற இடத்தில், தம்பிமுத்து அற்புதராஜா என்பவர் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இன்னொரு சம்பவத்தில், நாவலார் சாலையில் வடிவேலு சந்திரபிரபு என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதேபோல, யாழ்ப்பாணம் ஆடியபாதம் சாலையில், இலங்கை ராணுவம் சுட்டதில் இன்னொரு அப்பாவித் தமிழர் பலியானார்.
கருணா கும்பலால் 7 பேர் கடத்தல்:
இதற்கிடையே, இலங்கை ராணுவ வீரர்களின் உடையில் வந்த கருணா கும்பலைச் சேர்ந்தவர்கள் மட்டக்களப்பில், 16 வயதான பக்ஷிராஜா ஜெகதீஸ்வரன் மற்றும் வரதராஜன் ராம்குமார் ஆகியோரை கடத்திச் சென்றனர்.
கல்லியங்காடு நல முகாமிலிருந்து இவர்கள் கடத்தப்பட்டனர். சம்பூர், பள்ளிக்குடியிருப்பு ஆகிய பகுதிகளிலிருந்து போரினால் இடம் பெயர்ந்தோர் இங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அம்பாரை மாவட்டத்தில் 15 வயது சிறுவன் மற்றும் ஒரு பெண் உள்பட 5 பேர் கடத்தப்பட்டனர்.
இவர்களையும் கருணா கும்பலே கடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு ராணுவமும் துணை புரிந்துள்ளது.
கடத்தப்பட்ட வேலாயுதம் ஜெயசிங்கம் (48), நீலகண்டன் ராதிகா (22), கணேசமூர்த்தி சசிக்குமார் (15), கணபதிபிள்ளை சந்திரபோஸ் (33), வைரமுத்து தேவராசா (45) ஆகியோர் தம்புலிவில் என்ற இடத்தில் உள்ள கருணா கும்பலின் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் பெண்ணை மிரட்டும் ராணுவம்:
இந் நிலையில், இலங்கை ராணுவம் தங்களை மிரட்டுவதாக கூறி யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணையத்தை ஒரு பெண் தனது இரு மகன்களுடன் அணுகியுள்ளார். தங்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த செல்வராஜா விஜிதா என்ற அந்த 38 வயதுப் பெண், தனது இரு மகன்களான சேயோன் (16), ஜான்சன் (13) ஆகியோருடன் மனித உரிமை ஆணையத்தை அணுகி, தங்களை ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் மிரட்டுவதாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இதேபோல இன்னொரு தமிழ் இளைஞரும் பாதுகாப்பு கோரி ஆணையத்தை அணுகியுள்ளார். இவர்களை போலீஸாரிடம் ஒப்படைத்த ராணுவம், நீதிமன்றம் மூலம் சிறையில் வைத்து இவர்களைப் பாதுகாக்க உத்தரவிட்டது.
கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கானோர் ஆணையத்தை அணுகி சிறையில் தஞ்சமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.