சந்தனக் கூடு: சமரசம் பேச வந்தஇடத்தில் சரமாரி கத்திக் குத்து
மதுரை:சந்தனக் கூடு விழாவை நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையைப் பேசித் தீர்க்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்த இரு பிரிவினரிடையே பெரும் மோதல் மூண்டது. இதில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.
மதுரை நரிமேட்டில் ஒரு தர்கா உள்ளது. இந்த தர்காவின் ஜமாத் அலுவலகம் கோரிப்பாளையம் பகுதியில் உள்ளது. இந்த ஜமாத்துக்கு சமபத்தில் புதிதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிர்வாகிகள் தேர்வுக்கு ஏற்னவே நிர்வாகியாக இருந்த அப்துல் ரகீம் என்பவரும் அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சந்தனக் கூடு விழா நடத்துவது குறித்து ஜமாத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அதற்கு ரகீம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களையும் கலக்காமல் விழா நடத்தக் கூடாது என்று கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி விழாவை அமைதியாக நடத்துவதற்காக சமரசப் பேச்சுவார்த்தைக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. மதுரை வடக்கு தாசில்தார் அலுவலகத்திற்கு இரு தரப்பினரும் நேற்று அழைக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து இரு தரப்பினரும் தாசில்தார் அலுவலகம் உள்ள மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் அவர்கள் வந்தபோது தாசில்தார் அங்கு இல்லை. வேறு ஒரு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தார்.
தாசில்தாருக்காக இரு பிரிவினரும் காத்திருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு மூண்டுள்ளது.இதையடுத்து இரு தரப்பினரும் கற்களை வீசியும், சரமாரியாக அடித்துக் கொண்டும் மோதலில் இறங்கினர்.
அப்போது நாகூர் மீரான் என்பவரை இன்னொரு தரப்பு கத்தியால் குத்தி விட்டது. இதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து இரு தரப்பினரும் அமைதிப்படுத்தினர். குத்துப்பட்ட மீரான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரைக் கத்தியால் குத்தியதாக கூறப்படும் இருவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.