யாரோ செய்த தவறுகளை நாங்கள் சுமக்கிறோம்:வீட்டு வசதி அமைச்சர் சுப.தங்கவேலன்
குற்றாலம்:வீட்டு வசதி வாரியத்தில் யாரோ, எப்போதோ தரமில்லாத வீடுகளை கட்டித் தந்ததால் ஏற்பட்ட தவறுகளை இப்போது நாங்கள் சுமக்கிறோம் என வீட்டு வசதித்துறை அமைச்சர் சுப.தங்கவேலன் கூறினார்.
குற்றாலத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி ஆகிய பகுதிகளில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை பார்வையிட்டேன். சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்போருக்கு தவணைத் தொகை கட்டி முடித்த பின்னரும் வீட்டுப் பத்திரம் வழங்கப்படாமல் உள்ளது.
தற்போது 27,500 பேருக்கு பத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 80,000 பேருக்கும் வீட்டு பத்திரங்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
பலர் தொகை பாக்கி வைத்துள்ளதால் பத்திரம் வழங்க முடியவில்லை. அவற்றை கட்டினால் உடனடியாக பத்திரம் வழங்கப்படும்.
தரமில்லாத வீடுகளை கட்டி வீட்டு வசதி வாரியத்தில் யாரோ, எப்போதோ செய்த தவறுகளை நாங்கள் சுமக்கிறோம். தற்போது வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் கட்டப்படும் வீடுகள் தரமானதாகவே உள்ளன.
இந்த ஆண்டு ரூ. 326 கோடியில் பல்வேறு வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம். இவற்றில் ரூ. 198 கோடியில் 4,218 வீடுகள் கட்டும் பணியும், ரூ.49 கோடியில் 478 பிளாட்டுகள் மற்றும் 554 தனிதனி வீடுகள் அமைக்கும் பணியும் அடங்கும்.
இதைத் தவிர ரூ.79 கோடி செலவில் 536 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்படும்.
இதில் ரூ. 253 கோடி மதிப்பிலான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு திட்டம் துவங்கும் நிலையில் உள்ளது.
மேலும் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து வீடுகள் கட்டுவது குறித்தும் பேசி வருகிறோம்.
இந்த அரசு பதவியேற்ற பிறகு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான ரூ. 500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சி காலத்தில் சென்னை இந்திரா நகர் பகுதியில் விலையே நிர்ணயம் செய்யாமல் இரண்டு கோடி ரூபாய் மதிப்புடைய இடத்தை 23 நபர்களுக்கு விற்க அரசாணை தயாரித்துள்ளனர்.
அது ரத்து செய்யப்பட்டு தற்போது அந்த இடத்தை பொது ஏலத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் தங்கவேலன்.