45 நாள் குழந்தைக்கு பான் கார்டு!
சென்னை:பிறந்து 45 நாட்ளே ஆன குழந்தைக்கு வருமான வரித்துறை பான் கார்டு வழங்கியுள்ளது. இந்தியாவிலேயே மிகவும் இளம் வயதில் பான் கார்டு பெற்றவர் என்ற பெருமையும் இந்தக் குழந்தைக்குக் கிடைத்துள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் பாலமுருகன் (35). இவர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில், மும்பையைச் சேர்ந்த கிரிஷி என்கிற பிறந்து 56 நாளே ஆன குழந்தைக்குப் பான் கார்டு வழங்கப்பட்ட செய்தியைப் படித்தார் பாலமுருகன்.
இதையடுத்து தனது குழந்தைக்கும் பான் கார்டு வாங்க தீர்மானித்தார். ஜூன் 20ம் தேதி பிறந்த இவரது குழந்தை ஆர்.பி. அக்ஷிதா பிறந்து 45 நாட்கள்தான் ஆகிறது. விண்ணப்பித்தவுடன் அக்ஷிதாவுக்கு பான் கார்டு கிடைத்தது. நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் பாலமுருகனிடம் பான் கார்டை வழங்கினர்.
கிருஷியின் சாதனையை முறியடிக்கும் விதமாகவே தனது மகள் பெயரில் பான் கார்டு வாங்கியுள்ளதாக கூறுகிறார் பாலமுருகன்.
இந்தியாவிலேயே இளம் வயதில் பான் கார்டு வாங்கியுள்ள பெருமை அக்ஷிதாவுக்குக் கிடைத்துள்ளது. முன்பு ஒரிசாவைச் சேர்ந்த 3 வயதுக் குழந்தைக்கு பான் கார்டு கொடுக்கப்பட்டது. மிகவும் இளம் வயதில் முதன் முதலில் பான் கார்டு வாங்கிய குழந்தை இதுதான்.
பான் கார்டு வாங்கியதோடு நில்லாமல், தனது குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கு ஒன்றையும் ஆரம்பித்துள்ளார் பாலமுருகன். பான் கார்டு வாங்கி விட்டதால் தனது மகள் பெயரில் பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யவுள்ளாராம் பாலமுருகன்.
இத்தனை இளம் வயதில் பான் கார்டு வழங்கப்படுவது குறித்து வருமான வரித்துறையினர் கூறுகையில், பான் கார்டை யார் வேண்டுமானாலும் பெறலாம். தங்களது குழந்தைகள் பெயரில் முதலீடு செய்ய விரும்புவோர் இந்த கார்டை பெறலாம் என்றனர்.












Click it and Unblock the Notifications