காவிரியில் கர்நாடகம் புதிய தடுப்பணை: தடுக்ககோரி உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு
டெல்லி:காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு முரணாக, காவிரி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள், நீர்ப்பாசனத் திட்டங்கள் ஆகியவற்றை கர்நாடக அரசு செயல்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில்,
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணைகள் கட்ட முயற்சிப்பதும், புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை அமலாக்க முயற்சிப்பதும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மீறும் செயலாகும்.
1991ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 205 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால் கர்நாடகம் தடுப்பணைகள் கட்டினால், புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை அமல்படுத்தினால் தமிழகத்தின் பங்கு நீர் தடைப்படும்.
தற்போபாது காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்ட முயற்சிப்பதாகத் தெரிகிறது. மேலும், காவிரிப் பாசனப் பகுதியில் உள்ள சிறு குளங்களை தூர்வாரும் நடவடிக்கையிலும் கர்நாடக அரசு ஈடுபடவுள்ளது. இதன் மூலம் காவிரியிலிருந்து அதிக நீரை அவர்கள் எடுக்கும் வாய்ப்பு ஏற்படும்.
மேலும், தங்களது பகுதியின் கீழ் உள்ள பாசனப் பகுதியை அதிகரிக்கவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
இவையெல்லாம் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு முரண்பாடானதாகும். எனவே இந்த செயல்களில் கர்நாடகம் ஈடுபடக் கூடாது என்று கர்நாடக அரசுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications