தினகரன் அட்டாக்: குற்றப்பத்திரிக்கை தாக்கல்- குற்றவாளிகள் பட்டியலில் டி.எஸ்.பி!
மதுரை:மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்டு 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதில் டி.எஸ்.பி. ராஜாராமும் குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ளார்.
முதல்வர் கருணாநிதியின் அடுத்த வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பை தினகரன் வெளியிட்டது. அதில் மு.க.ஸ்டாலின் முதலிடத்திலும், கனிமொழி இரண்டாவது இடத்திலும், அழகிரி 3வது இடத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் கொந்தளித்த அழகிரி ஆதரவாளர்கள், கடந்த மே மாதம் 9ம் தேதி மதுரையை ரணகளப்படுத்தி விட்டனர். தினகரன் அலுவலகத்திற்குள் புகுந்து வெறியாட்டம் ஆடினர். இவர்களின் கோஷ்டிச் சண்டையில், 3 அப்பாவிகளின் உயிரும் அநியாயமாக பலியானது.
இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி மே 18ம் தேதி சிபிஐ விசாரணை தொடங்கியது.
இந்த வழக்கில் அட்டாக் பாண்டி, டைகர் பாண்டி, ஆரோக்கிய பிரபு, திருச்செல்வம், சரவண முத்து, முருகன், விஜயபாண்டி, கந்தசாமி, ரமேஷ் பாண்டி, வழிவிட்டான், ராமையா பாண்டியன், தாயமுத்து, சுதாகர், ரூபன், மாலிக், ரமேஷ்குமார், ஊர்இருளாண்டி, இன்னொரு இருளாண்டி, மாரி ஆகிய 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முருகன் என்கிற காட்டுவாசி முருகன் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந் நிலையில் நேற்று சிபிஐ தனது 32 பக்க குற்றப்பத்திரிக்கையை மதுரை தலைமை ஜூடிசியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. நீதிபதி தேவசகாயத்திடம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் டைகர் பாண்டி, இருளாண்டி, ஊர் இருளாண்டி, மாரி ஆகியோரத் தவிர மற்ற 15 பேரும் , தலைமறைவாக உள்ள காட்டுவாசி முருகனும் குற்றவாளிளாக ேசர்க்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் பட்டியலில் கடைசி நபராக, கலவரம் நடந்ததை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஊமச்சிகுளம் டி.எஸ்.பி.ராஜாராம் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர்கள் மீது வெெபாருள் சட்டம், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வழக்கில் 86 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கு தொடர்பாக 45 பக்க ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன.