ஹெல்மட்: ஏன் உறுதியாக அமல்படுத்தவில்லை?:அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
சென்னை:கட்டாய ஹெல்மட் சட்டத்தை ஏன் முழுமையாகவும், உறுதியாகவும் அமல் செய்யவில்லை என்று தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இதுகுறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தது தமிழக அரசு.
இந்த சட்டம் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட 6 மாநகராட்சிகளிலும், ஜூலை 1ம் தேதி முதல் தமிழகத்தின் இதர பகுதிகளிலும் கட்டாய ஹெல்மட் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
ஜூன் 1ம் தேதி அமலுக்கு வந்த சட்டம் அன்றைய தினம் மிகவும் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக பெண்களும், குழந்தைளும் கூட ஹெல்மட் அணிய வேண்டும் என்று அரசு கண்டிப்புடன் கூறியதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்தது.
(இந் நிலையில் மதுரை இடைத் தேர்தல் வேறு வந்தது)
இதையடுத்து ஹெல்மட் உத்தரவை கடைப்பிடிக்க வேண்டாம் என முதல்வர் கருணாநிதி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இந் நிலையில் பெண்களுக்கு இந்த சட்டத்திலிருந்து விதி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி நிம்மி வசந்த் என்ற பெண் என்ஜீனியர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், அரசு கட்டாய ஹெல்மட் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தவில்லை என்றும் சிலர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் முகேபாத்யாயா, சுகுணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கட்டாய ஹெல்மட் சட்டத்தை அரசு ஏன் முழுமையாக அமல்படுத்தவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக விளக்கம் அளித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வருகிற 21ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
அவமதிப்பு வழக்கு தள்ளுபடி:
இதற்கிடையே, கட்டாய ஹெல்மட் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தாத தமிழக அரசு மீது லட்சுமிநாராயணன் என்ற வக்கீல் இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார்.
ஆனால் இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு வருகிற 21ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது. எனவே இந்த அவமதிப்பு வழக்கை ஏற்க முடியாது என்று கூறி நீதிபதிகள் முகோபாத்யாயா, சுகுணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மனுவைத் தள்ளுபடி செய்து விட்டது.












Click it and Unblock the Notifications