மேட்டூர் அணை மீண்டும் நிரம்புகிறது:மீண்டும் 11 மாவட்டங்களில் வெள்ள அபாயம்
மேட்டூர்:கடந்த ஒரு மாதத்துக்குள் மேட்டூர் அணை இன்று மீண்டும் நிரம்பவுள்ளது. இதையடுத்து காவிரிக் கரையோரங்களில் வாழும் 11 மாவட்ட மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதே போல பவானி சாகர் அணையும் நிரம்பி வருவதால் பெருமளவில் நீர் திறக்கப்படவுள்ளது.
கர்நாடகத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அணை இன்று இரவுக்குள் தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டவுள்ளது. அணைக்கு தொடர்ந்து அதிக நீர் வந்து கொண்டிருப்பதால் விநாடிக்கு 23,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
மேலும் பவானி சாகர் அணையும் நிரம்பி வருவதால் அங்கிருந்தும் பெருமளவில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
வெள்ள அபாயம்:
இரு அணைகளுக்கும் நீர் வரத்து மேலும் அதிகரித்தால் நீரை அப்படியே வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், காரைக்கால் ஆகியவற்றில் காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல பவானி சாகர் அணை திறக்கப்படவுள்ளதால் சத்யமங்கலம், கோபிச்செட்டிப்பாளையும், பவானி தாலுகாக்களில் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.