சிவாஜி டப்பிங்கை எதிர்த்து வழக்கு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தை பிற மொழிகளில் டப் செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. இவர் ஒரு சினிமா உதவி இயக்குநர். இவர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.அதில், சிவாஜி படக் கதை என்னுடையது. ராமதாஸ் என்பவர் மூலம் இக்கதையை ஷங்கரின் மேலாளருக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அந்தக் கதையை என்னுடைய அனுமதி இல்லாமல் சிவாஜி படத்தில் பயன்படுத்தியுள்ளார் ஷங்கர்.
எனவே இப்படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் கூறியுள்ளார் சுடலைக்கண்ணு. இந்த மனு நிலுவையில் உள்ளது.
இந் நிலையில் சுடலைக்கண்ணு சார்பில் அதே நீதிமன்றத்தில் இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், நான் ஏற்கனவே தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந் நிலையில், சிவாஜி படத்தை இந்தி, ஜப்பான், சீனா, மலேசியா ஆகிய மொழிகளில் டப் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எனது வழக்கு நிலுவையில் உள்ளபோது அப்படத்தை பிற மொழிகளில் டப் செய்யவோ, ரீமேக் செய்யவோ தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் சுடலைக்கண்ணு.
இந்த மனு நாளை நீதிபதி விஜயேந்திர ராணி முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
சிவாஜிக்கு எதிரான இன்னொரு வழக்கு:
இந் நிலையில் சிவாஜி படத்தில் வில்லன் சுமன் வரும் காட்சியில், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் படம் இடம் பெற்றிருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை புதிய பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் சத்தியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், சிவாஜி படத்தில் வில்லனாக வரும் ஆதிகேசவன் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவரின் புகைப்படங்கள் இருப்பது போல காட்சி உள்ளது.
இதன் மூலம் தேசியத் தலைவர்களின் நன்மதிப்பு கெட்டுள்ளது. எனவே இந்தப் படத்துக்குத் தடை விதிக்க வேண்டும். ரூ. 50 கோடி நஷ்ட ஈட்டை காங்கிரஸ் கட்சிக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இரு தரப்பு வக்கீல்களும் வாதிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நான் கூட இப்படத்தைப் பார்த்தேன். ஏன், உலகமே பார்த்து விட்டது. இப்போது போய் இந்தக் காட்சியை மாற்றக் கோருவதால் என்ன ஆகி விடப் போகிறது என்றார்.
பின்னர் வழக்கை நீதிபதிகள் முகோபாத்யாயா, சுகுணா ஆகியோர் அடங்கிய பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications