பெரம்பலூர்: திமுக-அதிமுகவினர் பயங்கர மோதல்போலீஸ் தடியடி, துப்பாக்கிச் சூடு- பலர் காயம்
பெரம்பலூர்:பெரம்பலூரில் அதிமுகவினர் வைத்திருந்த பேனர்களை அப்புறப்படுத்திய திமுகவினருக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது.
இதையடுத்து வன்முறையை அடக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த பயங்கர வன்முறையில் பலர் படுகாயமடைந்தனர். அதிமுக எம்.பி. இளவரசன் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பெரம்பலூர் வருகிறார். பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் அவர் பங்கேற்கிறார்.
இதையொட்டி பெரம்பலூர் முழுவதிலும் திமுகவினர் பேனர்கள், கட் அவுட்டுகள், வரவேற்பு வளைவுகளை அமைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிமுகவினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் கட் அவுட்களை திமுகவினர் அகற்றியதாக தெரிகிறது.
இந்தத் தகவல் அறிந்ததும் அதிமுகவினர் பெருமளவில் திரண்டு வந்தனர். அவர்களுக்கு எதிராக திமுகவினரும் திரண்டனர். கிட்டத்தட்ட இரு தரப்பிலும் 500க்கும் மேற்பட்டோர் திரண்டதால் அந்தப் பகுதியே போர்க்களம் போல ஆனது.
இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் கலைந்து போகுமாறு உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
இதையடுத்து தடியடி நடத்தப்பட்டது. அப்படியும் கூட்டம் கலையாததால் கண்ணீர்ப் புகை குண்டு வீசப்பட்டது. அதற்கும் பலன் இல்லாததால் வானை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து கூட்டத்தினர் கலைந்து ஓடினர்.
போலீஸ் தடியடியில் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறை தொடர்பாக அதிமுக ராஜ்யசபா உறுப்பினர் இளவரசன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் பெரம்பலூரில் பெரும் பதட்டம் நிலவுகிறது. மோதல் பரவாமல் தடுக்க முக்கிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.