அசாமில் மீண்டும் வெறித்தனம்இந்தி பேசும் 14 பேர் படுகொலை
குவஹாத்தி:அசாமில், தீவிரவாதிகள் மீண்டும் இந்தி பேசுவோரைக் குறி வைத்து வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். கர்பி அங்லோங் மாவட்டத்தில் இந்தி பேசும் 14 பேர் வெறித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் 6 பேர் குழந்தைகள்.
கர்பி அங்லோங் மாவட்டம், டோலாமர் கிராமத்தில் இந்தி பேசுவோர் அதிக அளவில் உள்ளனர். அங்கு நேற்று இரவு உல்பா தீவிரவாதிகள் திபுதிபுவென புகுந்தனர். பின்னர் இந்தி மொழி பேசும் நான்கு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை வீட்டுக்குள்ளிலிருந்து வெளியே இழுத்து வந்தனர்.
பின்னர் அவர்களை வரிசையாக நிறுத்தி கண்மூடித்தனமாக வெறித்தனமாக சுட்டனர். பின்னர் அவர்களின் குடிசைகளையும் தீவைத்துக் கொளுத்தினர்.
இந்த கொடூர சம்பவத்தில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த வெறிச் செயலுக்கு கர்பி லோங்க்ரி தேசிய விடுதலை முன்னணி என்ற தீவிரவாத அமைப்புதான் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த 8ம் தேதி இதே மாவட்டத்திற்குட்பட்ட ஹவ்ராகாட் என்ற இடத்தில் இந்தி பேசும் 8 பேர் கொலை செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
சில மாதங்களுக்கு முன்பு இந்தி பேசுவோரை உல்பா தீவிரவாதிகள் கொன்று குவித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் இந்தி பேசுவோரை தீவிரவாதிகள் கொன்றுள்ளது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications