மேட்டூர் அணையில் அபாய அளவில் நீர் மட்டம்
மேட்டூர்:மேட்டூர் அணியின் நீர் மட்டம் தொடர்ந்து அபாயகரமான அளவில் இருந்து வருவதால் காவிரியில் மிக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
அணையில் அதன் கொள்ளளவான 120 அடியையும் தாண்டி 122.49 அடி நீர் இருந்து கொண்டுள்ளது. இதில் அதிகபட்சம் 124 அடியை தாற்காலிகமாகத் தேக்க முடியும்.
அணையில் இருந்து வினாடிக்கு 95,449 அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும் அணையின் நீர் மட்டம் குறையவில்லை. அணைக்கு தொடர்ந்து 96,098 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் நீர் மட்டம் அதிகரித்தபடியே உள்ளது.
அதிகமான நீர் திறந்துவிடப்படுவதால் காவிரியில் வெள்ளம் பாய்ந்தோடிக் கொண்டுள்ளது. இதனால் 11 மாவட்டங்களில் காவிரிக் கரையோரப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகள் தொடர்ந்து நீரில் மூழ்கியுள்ளன.
வீடுகள் இடியும் அபாயம்:
தொடர் நீர்வரத்தால் ஈரோடு மாவட்டத்தின் பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டள்ளன.
பள்ளிப்பாளையம் பகுதியில் புகுந்த வெள்ள நீரால், 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகளில் நீர் புகுந்தும் மக்கள் வெளியேறாமல் இருக்கிறார்கள். இந்த கட்டிடங்கள் தரமில்லாமல் இருப்பதால், கடந்த 4 நாட்களுக்கும் மேலாக வீட்டை சுற்றி நீர் ஊறியிருப்பதால் எந்நேரமும் அவை இடியும் நிலை உள்ளது.
குமாரபாளையத்தில் கரையோரங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் நீர் புகுந்துவிட்டது. அப்பகுதி மக்கள் சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிப்பாளையம் பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் எவ்வளவோ சொல்லியும் வீட்டை விட்டு வெளியேறாமல் ஆண்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications