மதுரை, கோவை ரயில் நிலையங்களுக்குதீவிரவாத அச்சுறுத்தல் - வேலு
விழுப்புரம்: மதுரை, கோவை, திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு கூறியுள்ளார்.
இது குறித்து ஆர்.வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மும்பையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதேபோல் பிப்ரவரி மாதம் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலிலும் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
இதையடுத்து ரயில் நிலையங்களின் பாதுகாப்பு அம்சங்கள், அச்சுறுத்தல்கள் குறித்து ரயில்வே துறை விரிவாக ஆய்வு நடத்தியது. அதில், மொத்தம் 185 ரயில் நிலையங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பது தெரிய வந்தது.
தமிழகத்தில் நான்கு ரயில் நிலையங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அவை மதுரை, கோவை, திருச்சி, விழுப்புரம் ஆகியவை ஆகும்.
தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பார்வையாளர்கள் அனுமதிப்பது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகின்றோம். அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் தானியங்கி வீடியோ கேமராக்கள் பொருத்தப்படும்.
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதாக தெரிந்தால், எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க மோப்பநாய்களும் ரயில்வே பாதுகாப்பு படையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இது தவிர மக்கள் நெரிசல் அதிகம் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றார் வேலு.












Click it and Unblock the Notifications