அமைதிப் பேச்சு சாத்தியமில்லை- ரணில்:மோதலில் 17 பேர் பலி-ராணுவ படகுகள் மூழ்கடிப்பு
சென்னை:இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை என அந் நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
டெல்லி செல்லும் வழியில் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளிடம் பேசுகையில்,
என்னுடைய நண்பர்களை பார்ப்பதற்காக இந்தியா வந்துள்ளேன். எந்த அரசியல் தலைவரையும் சந்திக்கும் எண்ணம் இல்லை.
இலங்கையின் இப்போதுள்ள சூழ்நிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடப்பது மிகவும் கஷ்டம். உள்நாட்டு போரால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாகி விட்டது.
இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரம் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதை சரிபடுத்தும் அதிகாரம் என்னிடம் இல்லை.
அமைதிக்கான வாய்ப்பை ஏற்படுத்துவது அதிபர் ராஜபக்ஷேவின் கையில் தான் உள்ளது என்றார்.
மோதலில் 11 பேர் பலி:
இலங்கையில் புதிதாக நடந்த கடும் சண்டையில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 11 பேர் பலியானார்கள். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கோவில்கண்டி என்ற இடத்தில் விடுதலைப் புலிகள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி நான்கு ராணுவ வீரர்கள் பலியானார்கள். 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பொதுமக்கள் தரப்பில் ஒருவர் படுகாயமடைந்தார்.
ராணுவ வாகனம் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
இதேபோல, வட கிழக்கில் உள்ள வெளி ஓயா பகுதியில் நடந்த மோதலில் ஐந்து விடுதலைப் புலிகளை ராணுவம் சுட்டுக் ெகான்றது.
அதே பகுதியில், ஒரு கிராமத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் ஒரு கிராமவாசி கொல்லப்பட்டார். நான்கு பேர் காயமடைந்தனர்.
யாழ்ப்பாணம் மார்க்கெட் பகுதியில் நடந்த சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார்.
கடற்புலிகள் தாக்குதல்
இந் நிலையில் திரிகோணமலைப் பகுதியில் கடற்புலிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் இலங்கை ராணுவத்தின் 3 பீரங்கி படகுகள் அழிக்கப்பட்டன.
புல் மோட்டை கடல் பகுதியில் நேற்றிரவு ரோந்து சென்று கொண்டிருந்த கடற்படையின் பீரங்கி படகுகள் மீது கடற்புலிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தினார்கள். இதில் 3 பீரங்கி படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
நேற்று இரவு 10 மணியிலிருந்து இன்று அதிகாலை 3 மணிவரை நடந்தது. இந்த சண்டையில் புலிகள் தரப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடற்புலிகளின் தாக்குதலையயடுத்து ராணுவத்தினர் பொது மக்கள் வாழும் பகுதிகளான மணலாறு, கொக்கு தொடுவாய் ஆகிய பகுதிகளில் ராக்கெட்டுளை வீசி தாக்குதல் நடத்தினர்.