டாடா: மக்களிடம் முத்துலட்சுமியும் கருத்து கேட்பு!
திருநெல்வேலி:டாடா நிறுவனத்தின் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலை தொடர்பாக சாத்தான்குளம் பகுதியில் மக்களை நேரில் சந்தித்து கருத்து கேட்டார் சந்தன வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி.
டாடா விவகாரத்தில் கருத்து கந்தசாமிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. தினமும் ஏதாவது ஒரு கட்சி, கலர் கலர் கொடிகள் கட்டப்பட்ட கார்களுடன் இந்தப் பகுதிக்கு வருகிறது.
அவர்களை சூழ்ந்து கொள்ளும் மக்களிடம் இவர்களாகவே ஏதாவது பேசுகிறார்கள். அதை மக்கள் கேட்கிறார்கள். பின்னர் அங்கிருந்து கிளம்பிப் போய் மக்கள் இதைச் சொல்கிறார்கள் என்று அவர்களாகவே எதையாவது சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
![]() |
இந்த வகையில் முத்துலட்சுமியும் கருத்து கேட்க வந்தார்.
சாத்தான்குளம் தாலூகாவுக்குடப்பட்ட குதிரை மொழி தேரி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றார்.
பின்னர் நெல்லை திரும்பிய அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், டாடா நிறுவனத்தின் டைட்டானியம் தொழிற்சாலை இம்மாவட்ட பகுதிகளில் அமைவதால் மக்களுக்கு எவ்விதமான ஆதாயமும் இல்லை. மேலும் இப்பகுதியிலுள்ள விவசாய மக்கள் டைட்டானியம் தொழிற்சாலை வருவதை விரும்பவில்லை.
தமிழக அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும். டாடா நிறுவனத்தோடு தமிழக அரசின் ஓப்பந்தம் தமிழ் மக்களின் மண்ணுரிமைக்கும், வாழ்வுரிமைக்கும் எதிரானது. மக்களின் விருப்பத்திற்காக மாறாக செயல்பட்டால் தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் இறங்கும்.
காட்டு வளங்களை ஆதிவாசி மக்களிடமே வழங்க வேண்டும் என்றார் முத்துலட்சுமி.
முன்னதாக திருநெல்வேலி பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் பாட்டாளி தமிழர் அரசியல் முன்ணனி அமைப்பின் சார்பில் நடைபெற்ற தமிழ் மண் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு முத்துலெட்சுமி பேசுகையில்,
நமது மண், நமது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இன்றைய இளைஞர்கள், சினிமா கலாச்சாரத்தால் சீரழிந்து போகிறார்கள்.
மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு மதுக் கடைகளை வாரத்தில் 1 நாள் மட்டும் திறக்க வேண்டும். ஏழை மக்களின் வாழ்வு உயரவேண்டுமெனில் மதுக்கடைகளை மூடவேண்டும்.
எனது கணவரை விஷம் வைத்து கொன்று விட்டு ஏதோ சுட்டுக் கொன்றது போல் நாடகம் ஆடுகிறார்கள். என் கணவர் இறப்புக்கு பின் கர்நாடக அரசு மறைமுகமாக தமிழ் மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வருகிறது.
காட்டில் மரங்கள் வெட்டி கடத்துவதும், வன விலங்குகளைக் கொல்வதும் அதிகரித்து விட்டன என்றார்.













Click it and Unblock the Notifications