ஊருக்கு இளைத்தவன் விவசாயிதானா?-ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:ஊருக்கு இளைத்தவர்கள் விவசாயிகள்தானா?, எதற்கெடுத்தாலும் விவசாய நிலங்களில்தான் கை வைக்க வேண்டுமா? என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோபத்துடன் கேட்டுள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் டாக்டர் ராமதாஸ் பேசினார். அவர் கூறுகையில்,

தமிழக அரசு ஆரம்பிக்கவிருக்கும் கேபிள் டிவி நெட்வோர்க்கில் தனியார் நிறுவனத்தை நுழைக்க முயற்சி நடக்கிறது. இதை நான் கண்டிப்பாக அனுமதிக்க மாட்டேன்.

இத் திட்டத்தை தமிழக அரசே முழுமையாக ஏற்று நடத்த வேண்டும்.

இதில் ஆஸ்திரேலிய நிறுவனத்தை நுழைய வைக்க முயற்சி நடக்கிறது. இதை அரசின் எல்காட் நிறுவனம் மூலமாகவே நடத்த வேண்டும்.

டைட்டானியம் டை ஆக்சைடு திட்டம் குறித்து முதல்வர் கருணாநிதிக்கு கடந்த 10ம் தேதி ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதை கடிதம் என்பதை விட அறிக்கை என்று சொல்லலாம்.

அதில், இந்த ஆலை அமைவதால் ஏற்படக் கூடிய சாதக, பாதக அம்சங்களையும், ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவித்து விட்டு,

அப்பகுதியில் டாடாவின் தொழிற்சாலை அமைவதால், ஏற்படப் போகும் பாதிப்புகளை அதிகாரிகள் விளக்கியுள்ளதை சுட்டிக் காட்டினேன்.

இந்தத் திட்டத்தால் அப்பகுதி மக்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும், இப்போது கிடைத்து வரும் வேலை வாய்ப்புகள் எப்படியெல்லாம் பறிபோகும் என்பதையெல்லாம் அதிகாரிகள் விளக்கியுள்ளதை சுட்டிக் காட்டியிருந்தேன்.

இந்தப் பிரச்சினையில் பாமக தவறான நிலையை மேற்கொண்டு வருவதாக தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை தொழில் வளர்ச்சி என்பதற்காக விவசாய வளர்ச்சியை அழித்து விடக் கூடாது.

விவசாயிகளுக்குச் சொந்தமான ஒரு சென்ட் நிலத்தைக் கூட அழித்து விடக் கூடாது, தொழிற்சாலைகளுக்காக கையகப்படுத்தக் கூடாது.

இது பாமகவின் நிலைப்பாடு, கொள்கை, இதில் மாற்றம் இல்லை. மேலும் இந்தத் திட்டம் தொடர்பாக கட்சித் தலைவர்கள் கருத்து கேட்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது குறித்து முதல்வர் கருத்து தெரிவிக்கையில், அந்தந்த தலைவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப கருத்துக்கள் கூறப்பட்டதாக தெரிவித்துள்ளார். இது உண்மையல்ல.

இதற்குத் தீர்வு காண வேண்டுமானால் அங்கு நடு நிலையுடன் கூடிய ஒரு குழுவை அனுப்ப வேண்டும். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அனுப்ப வேண்டும். அந்தக் குழுவில் அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பாதிக்கப்படுகிற கிராமங்களின் ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இடம் பெற வேண்டும்.

இவர்கள் இப்பகுதிகளுக்குச் சென்று மக்களின் கருத்தை, நிலையை ஆராயலாம். இது முடியாவிட்டால் பேசாமல் இந்தத் திட்டத்தையே அடியோடு கைவிட்டு விட வேண்டும்.

டாடாவின் சிறிய கார் தொழிற்சாலையை அமைக்க மேற்கு வங்கத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. அந்தத் தொழிற்சாலையை இங்கே வரவழையுங்கள். இங்கு மூடிக் கிடக்கும் தொழிற்சாலைகளில் இடம் கொடுங்கள். அல்லது புதிதாக வரவிருக்கிற தொழிற்பேட்டைகளில் இடம் ஒதுக்கிக் கொடுங்கள். டாடாவுக்கு பரீட்சை வையுங்கள், அவர்கள் தேறுகிறார்களா, இல்லையா என்று பார்ப்போம்.

ஊருக்கு இளைத்தவர்கள் விவசாயிகள்தானா, எதற்கெடுத்தாலும் விவசாய நிலங்களில்தான் கை வைக்க வேண்டுமா? காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாமல் அருகே, வீட்டு வசதி வாரியத்திற்காக விவசாயிகளின் வேளாண் நிலங்களை கையகப்படுத்தப் போகிறார்களாம். இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதை அரசு கைவிட வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீலாங்கரையிலிருந்து மகாபலிபுரம் வரையிலும், அதைத் தாண்டியும் பண்ணை இல்லங்கள் என்ற பெயரில் எண்ணற்றவர்கள் ஏராளமான நிலங்களை வளைத்துப் போட்டு வைத்துள்ளனர். அந்த இடத்தை வீட்டு வசதி வாரியத்திற்கு ஒதுக்கலாமே? அதையெல்லாம் எடுக்க அரசு ஏன் தயங்குகிறது என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+