வாய் பேச முடியாதவர் தீயில் கருகி பலிகாது கேட்காததால் பரிதாபம்
சென்னை:சென்னை அருகே தீ விபத்தில் சிக்கிக் கொண்ட வாய் பேச முடியாத நபர், பரிதாபமாக இறந்தார்.
சென்னை அம்பத்தூர் அருகே உள்ள வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. 40 வயதாகும் இவருக்கு வாய் பேச முடியாது. காதும் கேட்காது.
இவர் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது மின் வெட்டு ஏற்பட்டது. இதையடுத்து இவரது தாயார் ஜெயா, வீட்டில் சிம்னி விளக்கைப் பொருத்தி வைத்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சிம்னி விளக்கு கவிழ்ந்து விழுந்து தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து ஜெயா அலறி அடித்தபடி வெளியே வந்தார். ஆனால் தூங்கிக் கொண்டிருந்த பழனிக்கு தீவிபத்து ஏற்பட்டது தெரியவில்லை.
வீட்டுக்கு வெளியே வந்து கூச்சல் போட்ட ஜெயா, பழனியை வெளியே வருமாறு கூறி சத்தம் போட்டார். ஆனால் பழனிக்கு காது கேட்காததால் அவரது குரல் பழனியை எட்டவில்லை.
இந்த நிலையில் தீயின் வெப்பத்தால் பழனி விழித்தெழுந்தார். தன்னைச் சுற்றி தீ பரவியுள்ளதைப் பார்த்து திடுக்கிட்டார். ஆனால் உதவி கேட்டு குரல் எழுப்ப முடியாததால் தீயில் சிக்கிக் கொண்டார்.
அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தீயை அணைத்த பின்னர் உள்ளே போய் பார்த்தபோது பழனி பரிதாபமாக கருகி இறந்து கிடந்தார்.












Click it and Unblock the Notifications