முரசொலி மாறன் பிறந்த நாள்:மன்மோகன், கருணாநிதி, சோனியா அஞ்சலி
சென்னை:மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 73வது பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து இன்று தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
படத்திற்கு துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, மாநிலங்களவை துணைத் தலைவர் ரகுமான்கான், பாஜக தலைவர் அத்வானி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராம் விலாஸ் பாஸ்வான், சிவராஜ் பீட்டீல், பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி, திமுக எம்.பி. திருச்சி சிவா, எம்.பிக்கள் தங்கபாலு, டி.ராஜா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில், முரசொலி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள முரசொலி மாறன் சிலைக்கு முதல்வர் கருணாநிதி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பரிதி இளம்வழுதி, மத்திய அமைச்சர் ராசா, சபாநாயகர் ஆவுடையப்பன் உள்ளிட்டோரும் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
சன் டிவி ரூ 1 கோடி உதவி:
மாறனின் பிறந்த தினத்தையொட்டி சன் டிவி அறக்கட்டளை சார்பில் ஏழை, எளியவர்களுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான உதவிகள் செய்யப்படவுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
ராணி மேரிக் கல்லூரி கட்டட நிதிக்கு இதிலிருந்து ரூ. 20 லட்சத்தையும் அவர் வழங்கினார்.












Click it and Unblock the Notifications