எம்பி தொகுதி-புதுக்கோட்டையில் இன்று பந்த்-மாவட்டமே ஸ்தம்பித்தது
புதுக்கோட்டை:புதுக்கோட்டை எம்பி தொகுதியை நீக்கியதை கண்டித்து இன்று அந்த மாவட்டம் முழுவதும் அனைத்துக் கட்சிகள் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. தொகுதிகள் சீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரையின்படி அவை 6 தொகுதிகளாக (புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, விராலிமலை, கந்தர்வகோட்டை (தனி), திருமயம்) பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் திருமயம் தவிர மற்ற அனைத்து சட்டமன்ற தொகுதிகளும் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் இருந்தவை. இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்ட பட்டியலில் புதுக்கோட்டை எம்பி தொகுதியே இல்லை.
இங்குள்ள 4 சட்டமன்ற தொகுதிகள் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை (தனி) ஆகியவை திருச்சி எம்பி தொகுதியுடனும், விராலிமலை தொகுதி கரூர் எம்பி தொகுதியுடனும், ஆலங்குடி, திருமயம் சட்டமன்ற தொகுதிகள் சிவகங்கை எம்பி தொகுதியுடனும், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் எம்பி தொகுதியுடனும் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதுக்கோட்டை எம்பி தொகுதியே காலியாகிவிட்டது. இதற்கு புதுக்கோட்டை மாவட்ட அனைத்துக் கட்சியினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் இந்தத் தொகுதியை உருவாக்கக் கோரி இன்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பந்த் நடத்தப்படுகிறது.
ஆளும் திமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளதால் புதுக்கோட்டை மாவட்டம் ஸ்தம்பித்துப் போயுள்ளது.
மாவட்டம் முழுவதும் பஸ்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடவில்லை. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ரயில் மறியலும் நடந்தது, இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications