மதுரையில் ஐஐடி, கோவையில் ஐஐஎம்:பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை
சென்னை:மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக கல்வித்துறையின் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு புதிதாக ஐஐடி, ஐஐஎம், இந்திய அறிவியல் கழகம், இந்திய அறிவியல், கல்வி ஆய்வு மையம் உள்ளிட்டவற்றைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
![]() |
நாட்டில் அதிக அளவில் ஐஐடிக்கள், ஐஐஎம்கள் தொடங்கப்படும் என சுதந்திர தின உரையின்போது தாங்கள் தெரிவித்ததை வரவேற்கிறேன். அதன்படி மதுரையில் ஐஐடி, கோவையில் ஐஐஎம், திருச்சியில் இந்திய அறிவியல், கல்வி ஆய்வுக் கழகம் ஆகியவற்றை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறேன்.
இந்த நிறுவனங்களை தமிழகத்தில் ஆரம்பிப்பதன் மூலம், உயர் கல்வியில் தமிழகம் உயரிய நிலையை அடைய முடியும். இந்தக் கல்வியை பயில ஆர்வமாக உள்ள தமிழக மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் தமிழகத்தில் தொழில் மயமாக்கல் மற்றும் வேலைவாப்பு பெருக்கம் ஆகியவற்றுக்கும் இவை பெருமளவில் உதவும்.
நாட்டு நலன் மற்றும் சக்தியில் அறிவியல் தொழில்நுட்பம் முக்கிய இடம் வகிக்கிறது. எனவே திறமையான பொறியாளர்கள், விஞ்ஞானிகள், நிர்வாகிகளை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்விக்கு தமிழகம் எப்போதுமே முதலிடம் கொடுத்து வருகிறது. இங்கு கிடைக்கும் திறமையான மனித சக்தியின் மூலம் பெருமளவிலான தொழில் மற்றும் வர்த்தக முதலீடுகளை தமிழகம் ஈர்த்து வருகிறது.
மாவட்ட அளவில், ஒவ்வொரு தாலுகாவிலும் அரசு உதவியுடன் கல்லூரிகள், உயர் தரமான பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கையையும் நான் வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.













Click it and Unblock the Notifications