இந்திக்குப் பயந்து ஆங்கிலத்தை வரவேற்றதால்தமிழ் போய் விட்டது - ராமதாஸ்
சென்னை:இந்தி நுழைந்து விடக் கூடாது என்று பயந்து ஆங்கிலத்தை வரவேற்றோம். ஆனால் இன்றோ ஆங்கிலம், தமிழை விரட்டி விட்டு விட்டது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பசுமைத் தாயகம், காசா மற்றும் சென்னை செங்கல்பட்டு சமூக கல்விக்கான அறக்கட்டளை ஆகியவை இணைந்து பொதுப் பள்ளி முறை மற்றும் அருகாமைப் பள்ளி முறை குறித்த கருத்தரங்கம் ஒன்றினை சென்னையில் நடத்தின.
இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்றார். மேலும், முன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் முத்துகிருஷ்ணன், வசந்திதேவி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
![]() |
நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில், கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு ஒதுக்க மத்திய, மாநில அரசுகள் போதிய நிதி இல்லை என்று கூறுகின்றன. கல்விக்கு நிதி திரட்ட மத்திய அரசு செஸ் வரி விதித்தது. மத்திய, மாநில அரசுகள் இது போன்ற வரிகளை விதித்தோ அல்லது அதிமாக்கியோ கல்விக்கு நிதி திரட்டலாம். அதில் தவறு கிடையாது.
கல்வியை ஒரு வியாபாரம் போல நடத்தும் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். கல்வித்துறை நிர்வாகத்தை சீர்படுத்த வேண்டும். ஏழைகள், நடுத்தர மக்கள், பணக்காரர்களுக்கு என ஒவ்வொருவிதமாக கல்வி உள்ளது. இதை மாற்ற சமச்சீரான கல்வியைக் கொண்டு வர வேண்டும்.
கல்வி, சமூகநீதி போன்ற விஷயங்களில் நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பு மக்களுக்கு எதிராக அமைகிறது. அப்படித்தான். பி.எட். தரகர்கள் திறந்து வைத்துள்ள கடைகளுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியாக அமையும்.
வளர்ச்சி, வளர்ச்சி என்று பேசுகிறோம். ஆனால் கல்வியில் வளர்ச்சியில்லாமல் நாட்டின் வளர்ச்சி எப்படி சாத்தியமடையும். சமச்சீர் கல்விமுறை அமல்படுத்தப்பட்டால் தவிர இந்த முறையில் மாற்றம் வராது.
தமிழகத்தில் 75 சதவீத பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களே கிடையாது. இது போன்ற பள்ளிகளை தமிழக அரசு மூட வேண்டும். கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சர் ஆகியோர் வாரத்திற்கு ஒருமுறையாவது கல்வியாளர்களை சந்தித்து, அவர்களின் ஆலோசனையை பெற்று கல்வித்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்க பேராசிரியர் டாக்டர் முத்துக்குமரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அறிக்கை தாக்கல் செய்தும் இதுவரை அரசு அதை வெளியிடவில்லை. உடனடியாக வெளியிட்டு கல்வியாளர்களுடன் கலந்து பேசி, அடுத்த வருடமாவது அதை அமல்படுத்த வேண்டும்.
முதல் கட்டமாக, ஆரம்பப்பள்ளிகள் அனைத்தையும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என்று மாற்றி ஒரே மாதிரியான கல்வியை அமல்படுத்த வேண்டும்.
கடந்த ஆட்சியில் கல்வித்துறைக்கு அமைச்சர்களே இல்லை. ஆனால் இந்த ஆட்சியில் கல்வித்துறைக்கு இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
இதில் ஆரம்பக்கல்விக்கென தனி அமைச்சரை நியமிக்க வேண்டும். ஒரே விதமாகவும், தரமானதாக, கட்டாய கட்டணமில்லாத கல்வி அனைவருக்கும் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் எல்லாம் தமிழ் வழியில் கல்வி கற்றவன்தான். இன்று உயர் பதவிகளில் இருக்கும் பலரும் தமிழ் வழியில் படித்தவர்கள்தான். இப்போது ஆங்கில கல்வி வழி வந்து விட்டது. 6 முதல் 12ம் வகுப்பிற்குள் அதாவது 7 ஆண்டுகளுக்குள் ஒரு மொழியை சிறப்பாக எழுதவும், பேசவும், படிக்கவும் வைக்க முடியும். இப்படி இருக்கும்போது ஆரம்பக் கல்வியை ஏன் தமிழில் கற்றுத் தர முடியாது.
இப்படி நான் சொல்வதால் ஆங்கிலத்திற்கு விரோதி என்பார்கள். தமிழ் வெறியின், தீவிரவாதி என்றெல்லாம் கூறுவார்கள். நான் ஆங்கிலத்தை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுங்கள்.
உண்மையில், முறையாக கற்றுக் கொடுக்காத காரணத்தால்தான் நமது பிள்ளைகளுக்கு ஆங்கிலமும் தெரியவில்லை, தமிழும் தெரியவில்லை.
வேறு மொழி உள்ளே வந்து விடக் கூடாது என்பதற்காக இரு மொழிக் கொள்கையை கொண்டு வந்தோம். ஆனால் அது வந்து தமிழை விரட்டி விட்டு விட்டது என்றார் ராமதாஸ்.













Click it and Unblock the Notifications