தமிழறிஞர்களுக்கு தொல்காப்பியர் விருது:பரிசு ரூ. 5 லட்சம் - அர்ஜூன் சிங
சென்னை:செம்மொழியாம் தமிழில் சிறந்து விளங்கும் தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் தொல்காப்பியர் விருது வழங்கப்படும். இந்த விருது பெறுவோருக்கு ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் அறிவித்துள்ளார்.
மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் இதைத் தொடங்கி வைத்தார். முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் அர்ஜூன் சிங் பேசுகையில், செம்மொழித் தமிழில் உள்ள பழம்பெரும் காப்பியங்கள், இதிகாசங்களை தொகுத்து அச்சிடும் பணி கோவையில் நடந்து வருகிறது. அப்பணி இறுதி வடிவத்தில் உள்ளது. அச்சிடும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து விடும்.
இதுதவிர செம்மொழித் தமிழில் உள்ள படைப்புகளை தொலைக்காட்சித் தொடர்களாக உருவாக்கும் திட்டமும் உள்ளது. இவற்றை அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் வெளியிடுவோம்.
![]() |
செம்மொழித் தமிழில் சிறந்து விளங்கும் தமிழறிஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு தொல்காப்பியர் விருது என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த விருதுக்குரிய பரிசுத் தொகையாக ரூ. 1 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இத்தொகை முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையின் பேரில் ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதவிர குறள் பீடம் விருதும் வழங்கப்படும். இந்த விருதுக்கான பரிசுத் தொகையும் ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், ஐந்து இளம் தமிழறிஞர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய விருதும் வழங்கப்படும்.
செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தை சென்னையில் நிறுவும் தமிழக மக்களின் கனவு தற்போது நனவாகியுள்ளது. இந்த மையத்தை அமைக்க 29 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த மையத்தில் தமிழ் ஆய்வுகள் தவிர செம்மொழி தமிழ் போதனைகளும் நடத்தப்படும். மேலும் பட்டப் படிப்புகளையும் தமிழக அரசு இந்த மையம் மூலம் நடத்த நான் யோசனை தெரிவித்துள்ளேன்.
கடந்த 2 நூற்றாண்டுளாக சமஸ்கிருதம் குறித்து விரிவாக ஆய்வுகள் நடந்துள்ளன. அதே அளவு சிறப்புடைய, 20 திராவிட மொழிகள் தோன்றக் காரணமான தாய் மொழியான தமிழுக்கும் அந்த அளவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த மையம் அதனை நிறைவு செய்யும் என்றார்.
நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், தமிழை செம்மொழியாக அறிவித்ததற்காக பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், உதவிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி, அமைச்சர் அர்ஜூன் சிங் ஆகியோருக்கு பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைக்கு ஒரு வலுவான அடிப்படை செம்மொழியாக உயர்வு பெற்ற தமிழ் மொழிக்கு அமைக்கப்படுகிறது. அந்த செம்மொழியின் ஆக்கமும், ஊக்கமும் மேலும் மேலும் பெருகிடவும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு அது பயன்படவும், தமிழர் அல்லாதவர்களுக்கும் அது ஒரு கருவியாக அமைந்திடவும் என்னென்ன செய்ய வேண்டும், எப்படி நம்முடைய தமிழுக்கு அந்த ஆக்கத்தை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மையம்.
தமிழ் செம்மொழியாக ஆக வேண்டும் என்பதில் நான் காட்டிய ஆர்வத்தை விட, நாம் காட்டிய ஆர்வத்தை விட, நாமே வெட்கப்படக் கூடிய வகையில் அதிக ஆர்வத்தை அர்ஜூன் சிங் காட்டினார்.
புராணத்தில் சொல்வார்கள், அர்ஜூனனின் அம்பு அவ்வளவு வேகத்தில் சென்றது என்று. இந்த அர்ஜூனின் அம்பு அதை விட வேகத்தில் வந்து எனது இதயத்தை காயப்படுத்தவில்லை மாறாக காதலை ஏற்படுத்தியது என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில் அர்ஜூன் சிங்குக்கு வள்ளுவர் சிலையை முதல்வர் கருணாநிதி பரிசாக வழங்கினார். விழாவில் அமைச்சர் அன்பழகன், தமிழறிஞர்கள், முதல்வரின் மகள் கனிமொழி, காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.













Click it and Unblock the Notifications