மினி பஸ் - லாரி மோதலில் 22 பேர் பலி
ஜோகன்னஸ்பர்க்:தென் ஆப்பிரிக்காவின் கோமதிபூர் என்ற இடத்தில் நடந்த பயங்கர விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.
உலகில் அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடக்கும் நாடாக தென் ஆப்பிரிக்கா விளங்குகிறது. இங்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் சாலை விபத்துக்கள் இறக்கின்றனர்.
இங்குள்ளவர்கள் சாலை விதிகளை சுத்தமாக மதிப்பதில்லை. படு வேகமாக கார் ஓட்டுவதால் விபத்துக்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்காவில் 1 லட்சம் பேருக்கு 25 பேர் சாலை விபத்துக்களில்தான் உயிரிழக்கின்றனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள மினி பஸ் டாக்சிகள்தான் அதிக அளவில் விபத்தில் சிக்குகின்றன. இந்த வாகனங்களில் பயணம் செய்வது பாதுகாப்பற்றது என்று அரசு பலமுறை கூறியும் இந்த டாக்சிகள் மாற்றப்படாமல் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் இதுபோன்ற ஒரு மினி பஸ்ஸும், லாரியும் மோதிக் கொண்டதில் 22 பேர் இறந்துள்ளனர். ஜோகன்னஸ்பர்க் நகரின் கிழக்கில் உள்ள கோமதிபூர் என்ற இடத்தில் நேற்று இந்த பயங்கர விபத்து நடந்தது.
வேகமாக வந்த மினி பஸ் டாக்சியும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் டாக்சி தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. அதில் பயணம் செய்த 22 பேரும் உயிரிழந்து விட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மினி பஸ் டாக்சியை தடை செய்வது குறித்து தென் ஆப்பிரிக்க அரசு யோசித்து வருகிறது.