லண்டனை சேர்ந்த இலங்கை தமிழரிடம்பணம் பறித்த 3 போலீசார் கைது
திருச்சி:இலங்கைத் தமிழரின் குடும்பத்தினரை மிரட்டி ரூ. 1.3 லட்சம் பணம் பறித்த 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழரான ரமேஷ் தனது குடும்பத்தினருடன் கடந்த 3ம் தேதி திருச்சி வந்தார். உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவரை திருச்சி நாவல்பட்டு காவல் நிலையத்தைச் சேர்ந்த ஏட்டு ராமசாமி, கிரைம் பிராஞ்சை சேர்ந்த போலீசார் குமார், சகாய செல்வம் ஆகியோர் சந்தித்து நீங்கள் ஹவாலா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் வந்துள்ளதாக மிரட்டினர்.
என்ன சொல்கிறார்கள் என்றே புரியாமல் விழித்த ரமேசிடம் ரூ. 10 லட்சம் தந்தால் விட்டுவிடுகிறோம், இல்லாவிட்டால் ஹவாலா கேஸ் போடுவோம் என்றனர்.
வந்த இடத்தில் பிரச்சனையில் சிக்க விரும்பாத ரமேஷ் பேரம் பேசினார். இதையடுத்து ரூ 1.3 லட்சம் தந்தால் விட்டுவிடுவதாகக் கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம் ரூ. 20,000 பணத்தையும் நகைகளையும் தந்த ரமேஷ் தன்னை விட்டுவிடுமாறு கூறினார்.
ஆனால், மேலும் சில லட்சம் தர வேண்டும் என தொடர்ந்து 3 போலீசாரும் மிரட்டவே சிபிசிஐடி பிரிவுக்கு தகவல் தந்தார் ரமேஷ்.
இதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் சொன்னபடி 3 போலீசாரையும் பணம் வாங்க வருமாறு ஒரு இடத்துக்கு வரச் சொன்னார் ரமேஷ். அங்கு சிபிசிஐடி போலீசார் பதுங்கியிருந்தனர்.
3 போலீசாரும் அங்கு வந்து ரமேசிடம் பணத்தை வாங்கியபோது அவர்களை சிபிசிஐடி போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். மூவரும் திருச்சி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது. மேலும் கைது செய்து உள்ளே தள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications