சட்ட மாணவர்களுக்காக அதிமுக போராட்டம்!
சென்னை:சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான இட மாறுதல் கொள்கையை திமுக அரசு ரத்து செய்ததைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகள் முன்பு நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சிக்காலத்தில் மாணவ, மாணவியரின் எதிர்காலத்தைக் கருதி, சொந்த ஊர்களுக்கு அருகே உள்ள சட்டக் கல்லூரிகளில் இடமாறுதல் செய்து கொண்டு படிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி விண்ணப்பித்த மாணவ, மாணவியர்களுக்கு விதிமுறைகளுக்குட்பட்டு இடமாறுதல் தரப்பட்டது. இதனால் ஏழை, எளிய மாணவ, மாணவியர் தங்களது படிப்பை நிறுத்தாமல் தொடர வாய்ப்பளிக்கப்பட்டது.
வெளியூர்களில் தங்கிப் படிப்பதன் மூலம் ஏற்படும் பொருளாதார செலவுகளைத் தவிர்த்து ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கு இந்த இட மாறுதல் திட்டம் நல்ல பாதுகாப்பாக இருந்தது.
ஆனால் திமுக அரசு இந்த இடமாறுதலை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் சொந்த ஊருக்கு அருகே இருந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கிடைத்த இடத்தில் படிப்பதற்காக தங்கும் வசதி, உணவுச் செலவு ஆகியவற்றால் பொருளாதார இழப்பு ஏற்பட்டு, ஏழை, எளிய மாணவ, மாணவியர் தங்களது படிப்பைத் தொடர முடியாமல் உள்ளனர்.
மாணவர்களுக்கு இடமாறுதல் வழங்குவதால் அருக்கு எந்தவித நிதி இழப்போ அல்லது பாதிப்போ ஏற்படப் போவதில்லை. இதை உணராமல் மாணவர்களின் உழைப்பின் மூலம்தான் திராவிட இயக்கம் வளர்ந்ததாக கூறும் திமுக, மாணவர்களுக்கு எதிராக செயல்படுவது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.
சட்டக் கல்லூரி மாணவர்களின் நலனைப் பேணிக் காக்காமல், அவர்களின் கல்விக் கனவை சிதைக்கும் திமுக அரசைக் கண்டித்தும், மீண்டும் இட மாறுதலை அமல்படுத்தக் கோரியும் சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை சட்டக் கல்லூரிகள் முன்பு நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications