திமுக கவுன்சிலர் குண்டர் சட்டத்தில் கைது!
சிவகங்கை:சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் கார் குண்டு வைத்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக கவுன்சிலர் மந்தக்காளையை குண்டர் சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை நகராட்சித் தலைவராக இருந்த முருகன், கடந்த ஜூன் 29ம் தேதி கார் குண்டுக்குப் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக திமுக கவுன்சிலர்கள் மணிமுத்து, மந்தக்காளை, குண்டைத் தயாரித்துக் கொடுத்த என்ஜீனியர் பாலா உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் குண்டு தயாரித்த பாலா மீது பல வழக்குகள் உள்ளதால் அவர் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மந்தக்காளையையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், ஆட்சித் தலைவருக்கு பரிந்துரைத்தார்.
இதையடுத்து மந்தக்காளையை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சித் தலைவர் சித்திக் உத்தரவிட்டார். அதன் பேரில் மந்தக்காளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பான உத்தரவு சிறையில் உள்ள மந்தக்காளையிடம் காட்டப்பட்டு கையெழுத்து பெறப்பட்டது.












Click it and Unblock the Notifications