மண் பாண்டக் கிட்டங்கியில் கலர் டி.வி.க்கள்!
நெல்லை:நெல்லை மாவட்டம் கடையநல்லூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட தேன்பொத்தை கிராம ஊராட்சி மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய 800 கலர் டிவிக்களும் விநியோகிக்கப்படாமல் களி மண் பாண்ட கிட்டங்கியில் போட்டு வைக்கப்பட்டுள்ளன.
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட தேன்பொத்தை ஊராட்சி மன்ற பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களுக்கு விநியோகம் செய்ய தமிழக அரசின் சார்பில் 800 கலர் டி.வி. பெட்டிகள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டன.
அந்த டி.வி பெட்டிகள் அனைத்தும் இன்னும் விநியோகிக்கப்படாமல், களி மண் பாண்ட தொடக்க கூட்டுறவு சங்க கிட்டங்கியில் வைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டதாம்.
அப்பகுதி மக்கள் எப்போது கலர் டி.வி கொடுப்பீர்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டால், கணக்கெடுப்பு எடுத்து முடித்த பின்பு தான் டி.வி கொடுப்போம் என்று கூறி வருகின்றனர்.
மேலும் மண் பாண்ட தொழிலாளர்களோ தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வைக்கக் கூடிய இடத்தில் கலர் டி.வி பெட்டிகளை வைத்து விட்டதால், மண் பாண்டங்களை எங்கு வைப்பது என்று தெரியாமல் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.
களி மண் பாண்ட கிட்டங்கியில் காத்திருக்கும் கலர் டி.வி பெட்டிகள் பயனற்று போகும்முன் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications