கொலை வழக்கிலிருந்து சிபு சோரன் விடுதலை
டெல்லி:தனது உதவியாளர் சசிநாத் ஜா கொலை செய்யப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் ஜார்க்கண்ட் மாநில முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான சிபு சோரணை விடுதலை செய்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
சிபுவிடம் உதவியாளராக இருந்தவர் சசிநாத் ஜா. இவர் கடந்த 1994ம் ஆண்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் சிபு சோரன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த ஜார்க்கண்ட் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதி சிபு சோரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சிபு. உடனடியாக அவர் ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபு மேல் முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஸ்.சோதி, எச்.ஆர்.மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சிபு சோரனுக்கு எதிராக சிபிஐ போதுமான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என்று கூறி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.
கொலை செய்யப்பட்டவர் ஜாதான் என்பதை சிபிஐ ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவில்லை என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
சிபு சோரன் தவிர இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நந்த் கிஷோர் மேத்தா, சைலேந்திர பட்டாச்சார்யா, பசுபதி நாத் மேத்தா, அஜய் குமார் மேத்தா ஆகியோரையும் டெல்லி உயர்நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது.












Click it and Unblock the Notifications