தவ்ஹீத் ஜமாத் தலைவர் மலேசியாவில் கைது?:ஆதரவாளர்கள் சென்னையில் போராட்டம்!
சென்னை:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்னுலாப்தீன் மலேசியாவில் கைது செய்யப்பட்டடுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்னுலாப்தீன் மலேசியா சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு பொதுக் கூட்டம் எதிலும் பேசக் கூடாது என்று அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. இதையடுத்து சுற்றுலா விசாவில் அவர் மலேசியா சென்றார்.
இந் நிலையில் கோலாலம்பூரில் நடந்த ஒரு இஸ்லாமிய அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் ஜெய்னுலாப்தீன். அவரது பேச்சு அங்கு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதையடுத்து ஜெய்னுலாப்தீனை மலேசிய போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிகிறது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். உடனடியாக ஜெய்னுலாப்தீனை நாடு கடத்துமாறு மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.
இந்தத் தகவல் நேற்று நள்ளிரவில் சென்னையில் பரவியது. இதைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த ஏராளமானோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள மலேசிய துணைத் தூதரகம் முன்பு திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.
போலீஸார் விரைந்து வந்து அவர்களை அமைதிப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இன்று காலையும் ஜமாத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடலாம் என்று மலேசிய துணைத் தூதரகம் முன்பு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஏற்கனவே ஒருமுறை இலங்கை சென்றபோதும் ஜெய்னுலாப்தீன் இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications