கேரளளாவின் வசூல் வேட்டை: தமிழகவாகனதாரர்கள் புலம்பல்
செங்கோட்டை:நெல்லை மாவட்டத்தின் வழியாக கேரள எல்லைக்குள் நுழையும் தமிழக வாகனங்களிடம் கெடுபிடியாக பண வசூல் நடப்பதாக தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் சென்று திரும்பும் வாகனதாரர்கள் புலம்புகின்றனர்.
மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஆரியங்காவு முதல் தென்மலை வரை சுமார் 25 கிலோமீட்டர் மலைவழி சாலை உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி பெய்து வரும் மழையினாலும், அளவுக்கு அதிகமாக சரக்கு பொருட்கள், மணல் போன்ற பல்வேறு பொருட்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களாலும் இச்சாலை பழுதடைந்துள்ளது.
இச்சாலையை இன்னும் ஒரிரு மாதங்களில் புதுபிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் வரும் 26-ந் தேதி ஓணம் பண்டிகை நெருங்கி வருவதால் ஏராளமான வாகனங்கள் கேரள மாநிலத்திற்கு காய்கறி, பூக்கள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி செல்கின்றன.
இப்படிச் செல்லும் தமிழக வாகனங்களை கேரள எல்லைக்குள் சிலர் நிறுத்தி அடாவடியாக பண வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் உள்ளாட்சி அமைப்பின் பெயரைச் சொல்லி ரசீது புத்தகத்துடன் இந்தக் கொள்ளை நடந்து வருகிறது.
சாலைகளை சீர் செய்ய உள்ளதாகக் கூறி கனரக லாரிகளுக்கு ரூ.100 முதல் 200 வரையிலும், வேன், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களுக்கு ரூ.50 வீதமும் கெடுபிடி வசூல் நடத்தி வருகின்றனர்.
இந்தப் பணத்தைக் கொடுக்காமல் யாரையும் கேரளாவுக்குள் நுழைய விடுவதில்லையாம் அந்தக் கும்பல். இதனால் தண்டம் அழுது விட்டு புலம்பியபடி செல்கின்றனர் தமிழக வாகனதாரர்கள்.
இந்த வசூலை, போக்குவரத்து, கலால், வனத்துறை, வணிகவரி ஆகிய சோதனைச் சாவடிகள் முன்பே இந்தக் கும்பல் செய்கிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. அந்த அதிகாரிகளும் இந்த அடாவடி வசூலைக் கண்டுகொள்ள மறுக்கின்றனர்.
பணம் கொடுக்க மறுப்போரின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலையும் இருக்கிறாம்.
சபரிமலை சீசனின்போது கேரளாவுக்குள் வரும் வாகனங்களிடம் இப்படித்தான் பணத்தைப் பிடுங்குவார்கள். சமீப காலமாக இந்த கட்டாய வசூல் தொல்லை குறைந்திருந்தது. இந்த நிலையில், மறுபடியும் வசூல் வேட்டை ஆரம்பித்திருப்பதால் தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்வோர் பெரும் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications