சிறுவனின் சிசேரியன்: வழக்கில் புது திருப்பம்பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு வாக்குமூலம்
திருச்சி:துபாய் டாக்டர் வந்து அறுவைச் சிகிச்சை செய்வார் என்று கூறி ஏமாற்றி விட்டு, டாக்டர் தம்பதியினர் தங்களது மகனை விட்டு தனக்கு சிசேரியன் செய்ததாகவும், சில நாட்களில் குழந்தை இறந்து போய் விட்டதாகவும், மணப்பாறையில் 15 வயது சிறுவனால் சிசேரியன் செய்யப்பட்ட பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சில மாதங்களுக்கு நாட்டையே உலுக்கிய சம்பவம் மணப்பாறையில் 15 வயது சிறுவன் சிசேரியன் செய்த விவகாரம். மணப்பாறையைச் சேர்ந்த டாக்டர் தம்பதியான முருகேசன், காந்திமதி ஆகியோரின் மருத்துவமனையில், அவர்களது 15 வயது மகன் திலீபன் ராஜ் ஒரு பெண்ணுக்கு சிசேரியன் பார்த்து பரபரப்பை ஏற்படுத்தினான்.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் யார் என்பதில் முதலில் குழப்பம் நிலவியது. இந்த நிலையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பெண் யார் என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அவரிடமிருந்து பரபரப்பான வாக்குமூலத்தையும் வாங்கியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் ராஜகுமாரி (35). திருச்சி, பேட்டவாய்த்தலை, அண்ணா நகரைச் சேர்ந்தவர். இவரது கணவர் குமாரசாமி. இவர் ஒரு கூலித் தொழிலாளர்.
டாக்டர் தம்பதி நடத்தி வரும் மதி சர்ஜிகல் மற்றும் பேறு கால மருத்துவமனையில் கடந்த மே 4ம் தேதி அட்மிட் ஆனார் ராஜகுமாரி. அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையின் முதுகெலும்பில் குறைபாடு உள்ளதாக அவரிடம் டாக்டர் தம்பதியினர் கூறியுள்ளனர். இந்த நிலையில் 7ம் தேதி குழந்தை இறந்து விட்டது. 11ம் தேதி ராஜகுமாரி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மதி மருத்துவமனையில் தங்கியிருந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை ராஜகுமாரி போலீஸாரிடம் விவரித்துள்ளார். அவர் கூறுகையில், என்னை ஆபேரஷன் தியேட்டருக்கு கொண்டு சென்றனர். அங்கு முதுகில் மயக்க மருந்து செலுத்தினர். இதனால் எனக்கு உணர்வு போய் விட்டது. ஆனால் என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை என்னால் பார்க்க முடிந்தது.
அதன் பின்னர் எனக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை நடக்கப் போவதாகவும், துபாயிலிருந்து டாக்டர் வந்துள்ளதாகவும் கூறினார் டாக்டர் முருகேசன். ஆனால் ஒரு சிறுவன்தான் எனக்கு வந்து அறுவைச் சிகிச்சை செய்தார். டாக்டர் தாம்பதியினர் கூறியபடி அவர் அறுவைச் சிகிச்சை செய்தார். பின்னர்தான் அந்த சிறுவன் டாக்டர் தம்பதியின் மகன் என்று தெரிய வந்தது என்று கூறியுள்ளார் ராஜகுமாரி.
சிறுவன் செய்த அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு குழந்ைத சில நாட்களில் இறந்துள்ளது இந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் துபாய் டாக்டர் என்று கூறி டாக்டர் தம்பதியினர் அந்த அப்பாவிப் பெண்ணை ஏமாற்றியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் மணப்பாறை டி.எஸ்.பி. வி.ஜி.ஸ்ரீதர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications