ஹனீப்புடன் வேலை பார்த்த டாக்டர் டிஸ்மிஸ்
மெல்போர்ன்:தீவிரவாத தொடர்பு சர்ச்சையில் சிக்கி மீண்ட பெங்களூர் டாக்டர் முகம்மது ஹனீப்புடன் வேலை பார்த்து வந்தவரும், அதே தீவிரவாத சர்ச்சையில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவருமான டாக்டர் முகம்மது ஆசிப் அலி அவர் வேலை பார்த்து வந்த மருத்துவமனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் ஹனீப்புடன் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள கோல்ட் கோஸ்ட் மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் ஆசிப் அலி. ஹனீப் கைது செய்யப்பட்டபோது ஆசிப் அலியும் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்பதால் ஆசிப் அலியை விடுவித்தது ஆஸ்திரேலிய போலீஸ். இந்த நிலையில் கடந்த ஜூலை 27ம் தேதி மருத்துவமனையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ஆசிப் அலி.
வேலையில் சேருவதற்காக தனது பயோடேட்டாவில் திருத்தம் செய்ததாக கோல்ட் கோஸ்ட் மருத்துவமனை கண்டுபிடித்தது. இதையடுத்தே ஆசிப் அலி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 17ம் தேதி அவரது பாஸ்போர்ட்டை ஆஸ்திரேலிய அரசு திருப்பிக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து அவர் இந்தியா திரும்பி விட்டார்.
இந்த நிலையில்தான் அலியை தற்போது கோல்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் பணியிலிருந்து நீக்கியுள்ளது. தனது தவறை அலி ஒத்துக் கொண்டதால் அவரை பணியிலிருந்து நீக்கி விட்டது கோல்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம்.
இதுகுறித்து க்வீன்ஸ்லாந்து சுகாதாரத் துறை இயக்குநர் உஸ்சி ஸ்ரைபர் கூறுகையில், டாக்டர் அலியின் குணத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி அவரது மருத்துவ தகுதியைக் குறைத்து நாங்கள் மதிப்பிடவில்லை.
தவறான வழியில் டாக்டர் அலி பணியில் சேர்ந்துள்ளது நிரூபணமாகியுள்ளது. அதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறினார் ஸ்ரைபர்.












Click it and Unblock the Notifications