பழனியில் பயங்கரம்: ரோப் கார்அறுந்து விழுந்து 4 பேர் பரிதாப சாவு
பழனி:பழனி மலையில் ரோப் கார் கயிறு அறுந்ததில் ரோப் கார் 100 அடி பள்ளத்தில் விழுந்து அதில் பயணித்த ஆவின் நிறுவன உயர் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
![]() |
பழனி மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சியில் உள்ள கோவிலுக்கு செல்ல நீண்ட காலமாக வின்ச் பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2004ம் ஆண்டு இங்கு ரோப் கார் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், நேற்று மாலை வழக்கம் போல ரோப் கார்கள் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அப்போது அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்குப் போய்க் கொண்டிருந்த 3வது எண் கொண்ட ரோப் கார் உச்சியை அடையும் தருவாயில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, கேபிள் அறுந்து கீழ் நோக்கி வேகமாக வரத் தொடங்கியது.
அப்போது வந்து கொண்டிருந்த 9வது எண் கொண்ட ரோப் கார் மீது அது மோதி பின்னர் 100 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் 3வது ரோப் காரில் இருந்த சென்னை ஆவின் நிறுவன பொது மேலாளர் சுப்ரமணி (54), திண்டுக்கல் ஆவின் நிறுவன நிர்வாக இயக்குநர் வடமலை செட்டி (54), சுப்ரமணியின் மகள் நித்யா (25) ஆகியோர் உயிரிழந்தனர்.
வடமலை செட்டியும், நித்யாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுப்ரமணி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
3வது ரோப் கார் 9வது ரோப் கார் மீது மோதியதில், அதில் பயணித்துக் கொண்டிருந்த சுப்ரமணியன் மனைவி அமுதா (45) மற்றும் மகன் ரவிக்குமார் (30) ஆகியோர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது 3வது ரோப் காரில் மோதி அமுதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரவிக்குமார் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த ரவிக்குமாரும், தீபா என்ற சுப்ரமணியின் உறவுக்கார பெண்ணும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கர விபத்து காரணமாக அனைத்து ரோப் கார்களும் நிறுத்தப்பட்டன. இதனால் அந்தரத்தில் தொங்கியபடி பயணிகள் பெரும் பீதியுடன் இருந்தனர். அவர்களை தீயணைப்புப் படையினர் பத்திரமாக மீட்டு அடிவாரத்திற்குக் கொண்டு வந்தனர்.
ரோப் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நடந்துள்ள முதல் பயங்கர சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பரிகார பூஜைகள்:
இந்த விபத்தையடுத்து இன்று பழனி கோவிலில் சிறப்பு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன.
விசாரிக்கக் குழு:
விபத்து குறித்து அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் நிருபர்களிடம் கூறுகையில்,
பழனி ரோப் கார் விபத்து மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அதிக கண்காணிப்புடனும், மிகுந்த விழிப்புடனும் இயக்கப்பட்டு வந்த ரோப் கார் எப்படி விபத்துக்குள்ளானது என்பது பற்றி விசாரணை நடத்தப்படும்.
இதற்காக தனிக்குழு அமைக்கப்படும் விசாரிப்பார்கள். அவர்கள் கொடுக்கும் அறிக்கையின்படி எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்படும்.
பலியானவர்களின் நகைகள் திருட்டு:
இதற்கிடையே ரோப் கார் விபத்தில் பலியான சுப்பிரமணியின் மனைவி அமிர்தா, மகள் நித்யா ஆகியோர் நிறைய நகைகள் அணிந்திருந்தனராம். ஆனால், அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது நகைகளைக் காணவில்லை.
அதை யாரோ திருட்டியுள்ளனர். இது குறித்து போலீசாரிடம் புகார் தரப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications