அழகிரி: அதிமுகவுக்கு தலைமைச் செயலாளர் கண்டனம்
சென்னை:மு.க.அழகிரி சட்டவிரோத அதிகார மையமாக செயல்பட்டு வருவதாக அதிமுக கூறியுள்ளது உண்மையல்ல என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு பொது நல மனுவை தாக்கல் செய்தார். அதில்,
மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அழகிரி செயல்பட்டு வருகிறார்.
சட்டவிரோத அதிகார மையமாக அவர் செயல்படுகிறார். எனவே இந்த பகுதியில் சட்டம் ஒழுங்கைக் கண்காணிக்கவும், அரசின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த வழக்கு பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந் நிலையில் தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி சார்பில் விளக்க மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில் திரிபாதி கூறியிருப்பதாவது
அழகிரி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டிருப்பதாகவும், கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை.
அழகிரி சட்டவிரோத அதிகார மையமாகவும் செயல்படவில்லை. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் உயிர்களுக்குப் பாதுகாப்பு தருவதும் இங்குதான் சிறப்பாக உள்ளது.
தென் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கோரியிருப்பது கண்டனத்துக்குரியதாகும்.
சிறுபான்மை அரசு என்று தமிழக அரசை மனுதாரர் வர்ணித்திருப்பதும் கண்டனத்துக்குரியது. இந்த அரசை அதிமுக சிறுபான்மை அரசாக கருதினால், இந்த ஆட்சியை அகற்றி விட்டு புதிய ஆட்சியை அமைக்க தனக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்பதை சட்டசபையில் நிரூபிக்க முயலட்டும்.
மேலும் முதல்வர் கருணாநிதி மீதும் மனுதாரர் வசை பாடியுள்ளார். அவதூறாக குற்றம் சாட்டியுள்ளார். முதல்வருக்கு வயதாகி விட்டதால் அவர் செயலற்றவராகி விட்டார். வழக்கமான நிர்வாக செயல்பாட்டில் கூட அவரால் கவனம் செலுத்த முடியவில்லை என்று மனுதாரர் கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலின்போது காவல்துறை செயல்படாமல் இருந்தது என்று கூறியிப்பதும் உண்மைக்குப் புறம்பானதாகும். எனவே இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. அதற்கு இது தகுதியான வழக்கும் அல்ல என்று கூறியிருந்தார் திரிபாதி.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகோபாத்யாயா, பால் வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணையை செப்டம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications