8 வரி வசூல் அலுவலர்களை சுட்டுக் கொன்றனரா புலிகள்?
கொழும்பு:மக்களிடம் வசூலிக்கப்பட்ட வரிப் பணத்தில் மோசடி செய்ததாக 8 வரி வசூல் அலுவலர்களை விடுதலைப் புலிகள் நடு ரோட்டில் வைத்து சுட்டுக் கொன்றுள்ளதாக இலங்கை ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நிர்வாகம், போலீஸ், நீதித்துறை ஆகியவற்றுக்கு தனித்தனி பிரிவுகளை புலிகள் நடத்தி வருகின்றனர். வரி வசூல் உள்பட அனைத்து வகையான நிர்வாகப் பணிகளுக்கும் ஊழியர்களை நியமித்துள்ளனர்.
இந் நிலையில் இந்த வரி வசூல் பணத்தை கையாடல் செய்ததாக 8 பேரை புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மனின் உத்தரவின்பேரில் புலிகள் சுட்டுக் கொன்றுள்ளதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது.
ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
2 வாரங்களுக்கு முன் கிளிநொச்சி வடக்கச்சியில் பொது மக்கள் முன்னிலையில் வைத்து அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப் பகுதி மக்கள் சிலர் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு தப்பி வந்துள்ளனர். அவர்கள் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளனர்.
இந்தக் கொலைகளுக்கு உண்மையான காரணம் வேறு. புலிகள் பிரிவின் சில தலைவர்கள் வரிப்பணத்தை தங்கள் சொந்த உபயோகத்துக்காக பயன்படுத்துவதை எதிர்த்துக் கேட்டதால் தான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்கள் அனைவரும் படித்த இளைஞர்கள். அவர்கள் ஏழை மக்களை கட்டாயப்படுத்தி வரி வசூல் செய்வதை எதிர்ப்பவர்கள். பணத்தை முறைகேடாக பயன்படுத்துவதை தட்டிக் கேட்டவர்கள் என சம்பவத்தை பார்த்த மக்கள் கூறியுள்ளனர் என ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஆனால், இந்த சம்பவத்தை புலிகள் உறுதி செய்யவில்லை.
இதற்கிடையே புலிகள் தாக்கியதில் 3 ராணுவத்தினர் பலியாகியுள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் பலமோடை அருகே இச் சம்பவம் நடந்ததாக புலிகள் கூறியுள்ளனர். இதை ராணுவம் உறுதி செய்யவில்லை.












Click it and Unblock the Notifications